tamilnadu

img

நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி

திருவாரூர், ஜன. 3- திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஒருவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மூவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் 11 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  திருவாரூர் ஒன்றியத்தில் புதூர், திருக்காரவாசல், உமாகேஸ்வரபுரம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய வார்டு எண் பதிநான்கில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜி.வசந்தா 1118 வாக்கு பெற்று ஒன்றிய கவுன்சிலராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பின்னவாசல் ஊராட்சி மன்ற தலைவராக டி.ஆர்.தியாகராஜன் 541 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் ஜி.ரகுபதி (திருக்காரவாசல்) 556, பி.மாதவன் (வேப்பத்தாங்குடி) 356, ஆர்.எஸ்.சுந்தரய்யா (புதுப்பத்தூர்) 300, வி.பாலு (புலிவலம்) 250 வாக்குகள் பெற்றனர். மாவட்டத்தை பொருத்தவரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாவட்ட ஊராட்சி கவுன்சில் பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் என மகத்தான வெற்றிகளை பெற்றுள்ளன.

நன்னிலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜெ.முகமது உதுமான் நான்காவது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு வெற்றி பெற்றுள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பூந்தோட்ட கிளைச் செயலாளருமாவார். 

மன்னார்குடி

கோட்டூர் ஒன்றியம் இருள் நீக்கி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கொடி குமாரராஜாவையும், 86 குலமாணிக்கம் 16 வது வார்டு கோட்டூர் ஒன்றிய கவுன்சில்  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி. மாரியப்பனையும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.  திமுக கூட்டணி சார்பில் இருள்நீக்கி ஊராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் வெற்றி பெற்ற கூட்டணியின் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும்   வாழ்த்துக்களை தெரிவித்தும் வெற்றிக்கு உழைத்த கட்சியின் கோட்டூர் ஒன்றியக் குழுவினரையும் கட்சி அணியினரையும் பாராட்டினார். 

நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தேர்தலில், நாகை மாவட்டத்தில் சிபிஎம் சார்பில் வெற்றி பெற்றவர்கள்: ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள்- நாகை ஒன்றியம் - பெருங்கடம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவராக- எம்.தீபா மாரிமுத்து, கீழ்வேளூர் ஒன்றியத்தில்-வடகரை ஊராட்சித் தலைவர்- எஸ்.பாண்டியன், 75.அனக்குடி ஊராட்சி மன்றத் தலைவர்- கஸ்தூரி கனகரெத்தினம், ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர்- அகிலா சரவணன், கீழையூர் ஒன்றியம், சோழவித்தியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்- கோமதி தமிழ்ச்செல்வன், தலையாமழை ஊராட்சி மன்றத் தலைவராக -பி.என்.உத்திராபதி, வேதாரணியம் ஒன்றியம், பிராந்தியக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக- கே.ராஜலெட்சுமி கஸ்தூரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பதவி: தலைஞாயிறு ஒன்றியம், வார்டு-2 (கொத்தங்குடி)-எம்.ஞானசேகரன், வேதாரணியம் ஊராட்சி ஒன்றியம்-மருதூர், வார்டு-9 உறுப்பினராக -வி.முருகான்ந்தம் ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக சி.பி.எம். சார்பில் 50 க்கு மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில், ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவராக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார்.  இதே போல் ஆம்பலாபட்டு தெற்கு ஊராட்சி மன்றத்  தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட கட்சி வேட்பாளர் எஸ்.ஸ்ரீதேவி பிரியா வெற்றி பெற்றுள்ளார். அம்மாபேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் 8 ஆவது வார்டு, பொறுப்பிற்கு போட்டியிட்ட, என்.வெற்றிச்செல்வி நம்பிராஜன் வெற்றி பெற்றுள்ளார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் (மேற்பனைக்காடு) ஒன்றிய குழு உறுப்பினர் (வார்டு-5) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜோதி மேகவர்ணம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஜோதி மேகவர்ணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, கன்னையா, மலை முருகன், கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டினர். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பலவரசன் ஊராட்சி மன்ற தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்திரா சுப்பிரமணியன் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற சந்திராவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டினர்.  திருப்பெருந்துறை ஊராட்சி 8வது வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரம்ஜான்கலந்தர் முகைதீன் வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற அவருக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பாராட்டி வாழ்த்தினர்.

திருச்சி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட முத்துக்குமார், ஆயிரத்து 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான சான்றை உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பாலசுப்பிரமணியன், ஜாபர், ராஜாராம், மணி, ராஜசேகர், கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 11 வது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார்.  பி.ராமமூர்த்தி 541 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 1749. இவரை எதிர்த்து போட்டியிட்ட  அதிமுக வேட்பாளர் கருப்பசாமி 1208 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.





 

;