பள்ளி கல்லூரிகளை டிசம்பர் மாதத்திற்கு பின் திறக்கலாமே? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
நவம்பர் 16ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தேனியைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறந்த நிலையில், பல மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருகிறது. இந்த சூழலில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும். அதனால் பள்ளி கல்லூரிகளை டிசம்பர் மாதத்திற்கு பின் திறக்கலாமே? என தெரிவித்த நீதிபதிகள், இது நீதிமன்றத்தின் கருத்துதான் இது குறித்து அரசு முடிவெடுக்கும். அதற்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்தனர்.
அரசு தரப்பில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாகவும், அதிகப்படியான பெற்றோர்கள் பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றே கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.