tamilnadu

img

16 லட்சம் பேர் எழுதினர்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு


 சென்னை, செப்.1- 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை, தமிழகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், வரித் தண்டலர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி.யானது குரூப் 4 தேர்வை நடத்துகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படை தகுதியாகக் கொண்ட இந்த தேர்வை எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.  அவர்களில் ஆண் தேர்வர்கள் 7 லட்சத்து 9 ஆயிரத்து 103 பேர். 9 லட்சத்து 20 ஆயிரத்து 725 பேர் பெண்கள். இந்த முறை ஆண்களைக் காட்டிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் குரூப் 4 தேர்வை எழுதுகின்றனர். 21 ஆயிரத்து 996 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். 

இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்கள் அமைக்கப்பட்டன. ஞாயிறன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. இத்தேர்வை எழுதும் தேர்வர்கள் 9.30 மணிக்கு தொடங்கி தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பேனா தவிர்த்து  பென்சில், செல்போன், புத்தகங்கள், பைகள் போன்ற பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 405 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 281 பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.  தேர்வு மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் 81 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.