tamilnadu

img

தவிர்த்திருக்க முடியாததா என்.எல்.சி. விபத்தும் உயிர்ப் பலியும்?- ஜி.ராமகிருஷ்ணன்,

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில், மே 7 ஆம் தேதி யும், ஜூலை முதல் தேதியும் நடந்த இரண்டு விபத்து செய்தி கேட்டு நாடே அதிர்ச்சிக்குள் ளானது. இந்த விபத்துகளில் நிரந்தரப் பணியாளர்கள் 6, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் 8, சொசைட்டி தொழிலாளர் கள் 4 பேர் இறந்துவிட்டனர்.  அவர்களின் குடும்பங்களு க்கு நஷ்டஈடு அளிப்பதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்க இருப்பதாகவும் என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நஷ்டஈடும், வேலையும் அளிக்கப்பட்டா லும், விலை மதிக்க முடியாத உயிரிழப்பை ஈடுசெய்ய முடியாது. ஜூலை முதல் தேதியில் நடந்த விபத்தின்போதே 6 இறந்துவிட்டனர், மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவந்த 17 பேரில் 7 பேர் இறந்துவிட்டார்கள்.  நெய்வேலியிலும் கொரோனா தொற்று 43 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் மின்உற்பத்தி அத்தியாவசியத் தேவை என்பதால், தொழிலாளர்கள் அர்ப்பணிப்போடு பணி செய்து வரு கிறார்கள்.

நாடு முழுவதுமே மின்உற்பத்தி நிலையங்கள் ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது - பாரட்டுக்குரியது. ஒரே ஆண்டில் நெய்வேலியில் இரண்டு விபத்துகள், அதுவும் இரண்டு மாத இடைவெளியில் நடந்திருப்பது வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டு விபத்துகளும் கொதிகலன் (பாய்லர்) சம்பந்தப்பட்ட விபத்து என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.  நெய்வேலி சிஐடியு சங்கத்தின் பொதுச் செயலாளராக இக்கட்டுரையாளர் இருந்தபோது, 1984 ஆம் ஆண்டில் தற்போது விபத்துக்குள்ளாகிய இரண்டாம் அனல்மின் நிலைய சிமினி கட்டுமானப் பணியின் போது, சாரம் சரிந்து 6 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள்  இறந்தார்கள். அதன் பிறகு ஒரே விபத்தில் இத்தனை பேர் இறப்பது இதுவே முதல்முறை.  35 ஆண்டுகளுக்கும் மேலாக சிற்சில விபத்துக்களை தவிர பெரும் விபத்துக்கள் இன்றி செயல்பட்ட என்.எல்.சி நிறுவனத்தில் தற்போது அடுத்து அடுத்து பெரும் விபத்துக் கள்  நடந்துள்ளதை ஆழ்ந்து ஆராய வேண்டியுள்ளது.

விபத்துக்குக் காரணம் என்ன? 

கொதிகலனுக்கு எரியூட்டுவதற்காக கன்வேயர் மூலம்  கட்டிகளாக, துண்டுகளாக அனுப்பப்படும் பழுப்பு நிலக்கரி மில்லில் அரைக்கப்பட்டு, நுண் துகள்களாக குழாய் மூலம் கொதிகலனுக்கு 180 டிகிரி வெப்பத்துடன் செல்லும். கொதிகலனில் 800 டிகிரி வெப்பம் பராமரிக்கப்படுகிறது. குழாய் மூலம் இத்தகைய முறையில் கொதிகலனுக்குச் செல்லும் பழுப்பு நிலக்கரி நுண் துகள்கள் கொதிகலனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படியும். இந்தப் படிமத்தை தண்ணீர் அல்லது காற்று மூலம் அன்றாடம் அகற்றிச் சுத்தம் செய்திட வேண்டும். இந்த வேலை தினசரி செய்ய வேண்டிய வேலை.  இதைச் செய்வதற்காக, இரண்டாம் அனல்மின்நிலை யத்தில் உள்ள 7 மின்உற்பத்தி யூனிட்டுகளுக்கும் சேர்த்து, ஏற்கனவே 80 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள். இவர்களில் 60 பேரை நிர்வாகம் குறைத்து தற்போது 20 பேர் மட்டுமே உள்ளர். இதனால் படிமத்தை அகற்றும் வேலை அன்றாடம் நடப்பதில்லை.

இத்தகைய பின்னணியில் படிமத்தை அகற்றும் வேலை செய்திட ஜூன் 30 ஆம் தேதி ஆறாவது யூனிட்டில் உள்ள கொதிகலனை பணிமுடக்கம் செய்து, ஜூலை முதல் தேதி காலை படிமத்தை அகற்றும் வேலையைத் துவக்கினார் கள். முதல்நாள் கொதிகலன் பணிமுடக்கம் செய்யப்பட்டா லும், கொதிகலனில் வெப்பம் நீடிக்கும். ஜூலை முதல் தேதியன்று படிமத்தை அகற்றும் வேலையை தொழிலாளர் கள் துவங்கிய போது படிமம் தீப்பிடித்து எரிந்து, தீ விபத்து  ஏற்பட்டிருக்கிறது. மேலும் கொதிகலனைத் தாங்கி நிற்கும் இரண்டு மீட்டர் நீள, அகல தூண்கள் (90 மீட்டர் உயரம்), அதனை தாங்கி நிற்கும் விட்டங்களின் உள்ளேயும் பழுப்பு நிலக்கரி படிமமும் சேரும். அதையும் அன்றாடம் அகற்றும் வேலையை செய்ய வேண்டும். இந்த விட்டத்திற்கு உள்ளே யும் படிமம் சேர்ந்திருந்த காரணத்தினால் அதை அகற்றுவ தற்கு முயற்சிக்கின்ற போது அதுவும் தீப்பற்றி எரிந்து விட்டங்களில் சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விட்டங்களில் உள்ள படிமங்களை அவ்வப்போது அகற்றாத காரணத்தினால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என பொறியாளர்கள் கூறுகிறார்கள். 

இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள ஏழு கொதிகலன்களும் நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு கொதிகலன் 25 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு, அதன் இயங்கும் காலத்தை நீட்டிப்பதற்காக அதை புன ரமைத்திருக்க வேண்டும். இத்தகைய வேலையை நிர்வாகம் செய்யவில்லை. மேலும் கடந்த காலங்களில் ஆண்டு பரா மரிப்புக்காக கொதிகலன்கள் பணிமுடக்கம் செய்யப் பட்டால் 45 நாட்கள் கொதிகலன் முடக்கத்தில் இருக்கும். ஆனால் தற்போது ஆண்டு பராமரிப்புக்காக 25 நாட்கள் மட்டுமே கொதிகலன்கள் முடக்கத்தில் வைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியில் இவை சரியான அணுகுமுறையல்ல.

இதற்கு முன்பு 24.7.2016ல் 5வது யூனிட்டில் இதைப்போன்ற விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த பகுதியை பார்வையிட இரண்டாவது அனல் மின் நிலை யத்திற்கு அங்கீகாரம் பெற்ற முதன்மைச் சங்கமான சிஐடியு சங்க நிர்வாகிகள் வேல்முருகன், ஜெயராமன், குப்புசாமி ஆகியோர் சென்றனர். என்.எல்.சி. நிறுவனத்தினுடைய மனித வளத்துறை நிர்வாகம் இந்த மூன்று நிர்வாகிக ளுக்கும் அனுமதியின்றி சென்றதற்காக நோட்டீஸ் கொடுத்து, ஒரு இன்கிரிமென்ட் பிடித்தம் செய்யும் தண்ட னையை அளித்தது. விபத்து ஏற்படுகிற போது அந்த இடத்திற்கு சென்று தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் இத்தகைய பிரச்ச னைகளில் தொழிலாளர் விரோதப் போக்கையே கடைப் பிடிக்கிறது. விபத்தை பார்க்கச் சென்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த என்.எல்.சி. நிர்வாகம் மனித வளத்தை பாதுகாக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. மேற்கண்ட தேதியில் நடந்த விபத்து குறித்த காரணங்க ளை ஆய்வு செய்வதற்கு நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. அதிலிருந்து எந்த படிப்பினையும் பெறவில்லை.

மேலும் 9.6.2019 அன்று ஆறாவது யூனிட்டில் இதைப் போன்று இன்னொரு விபத்து நடந்து ஒரு தொழிலாளி இறந்துவிட்டார்.  விபத்து நடந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை நிர்வாகம் அமைத்தது. ஆனால் இதுவரை அந்த குழு என்ன செய்தது என்பது பற்றியோ, அதனுடைய அறிக்கையையோ நிர்வாகம் வெளியிடவில்லை. மேலும் 9.6.2019 அன்று விபத்து நடந்த பிறகு கொதிகலனை நெய்வேலி நிறுவனத்திற்கு வழங்கிய, நிறுவிய திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் பராமரிப்புப் பணி செய்திருக்க வேண்டும். காரணம், அந்த தொழில்நுட்பத்தை அளித்த வர்கள் பெல் நிறுவனம் தான். மாறாக, செலவை குறைப்பது என்ற பெயரில் 9.6.2019 அன்று நடந்த விபத்துக்கு பிறகு கொதிகலனை பராமரிப்புச் செய்யக் கூடிய பணியை நெய்வேலி காண்ட்ராக்டருக்கு அளித்தது. பராமரிப்புப் பணிகளை பெல் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என சிஐடியு முன்வைத்த கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் நிராகரித்தது. மே-7 விபத்துக்கு பின்னால் கூட நிர்வாகம் பாடம் கற்றுக் கொள்ளாதது அடுத்த விபத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.

அனல்மின் நிலையத்தில் இயங்கக் கூடிய கொதிகலன் களை நிறுவுவது, இயக்குவது, பராமரிப்புச் செய்வது போன்ற பணிகளை முறைப்படுத்துவதற்கு இந்திய கொதி கலன் சட்டம் ஒன்று உள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு 1923 ஆம் ஆண்டே சட்டம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. பாய்லர் சான்றிதழ் பெற்ற பொறியாளர்கள், தொழிலாளர்கள் தான் அங்கு பணிபுரிய வேண்டும். அந்தச் சட்டம் வழிகாட்டக் கூடிய பல அம்சங்களை என்.எல்.சி. நிர்வாகம் கடைப்பிடிக்க வில்லை. இதுவும் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விட்டது.  தாராளமயக் கொள்கையை மத்திய அரசு அமலாக்க துவங்கிய பிறகு, என்.எல்.சி. நிறுவனம் நிரந்தரத் தன்மை யுள்ள பல வேலைகளை காண்ட்ராக்ட்டுக்கு விட்டு வருகிறது. இத்தகைய பகுதிகளில் தொழில்நுட்ப தகுதியுள்ள தொழிலா ளர்கள் போதிய எண்ணிக்கையில் வேலை செய்யாததால் வேலையின் தரம் குறைந்து பல பகுதிகளில் சிறிதும், பெரி துமாக பல விபத்துகள் நடந்துள்ளன. 

செலவைக் குறைப்பது என்ற பெயரில் என்.எல்.சி. நிர்வா கம் காண்ட்ராக்ட் விடுவது பல முறைகேடுகளுக்கு வழி வகுத்து, விபத்துக்கு அடிகோலுகிறது. தற்போது என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளர்க ளின் எண்ணிக்கை 7982. காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் 14750 பேர். நிரந்தரத் தொழிலாளர்களை விட காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் ஒரு மடங்கு அதிகம்.  நிர்வாக மற்றும் உற்பத்திச் செலவைக் குறைத்து, லாபத்தை  மட்டுமே மையமாக கொண்டு செயல்பட்ட என்.எல்.சி நிர்வாகம், பராமரிப்பு, பாதுகாப்பு இரண்டையும் காற்றில் பறக்க விட்டதன் விளைவு தான் இந்தக் கோர விபத்து.  மத்திய அரசு வற்புறுத்தலால் என்.எல்.சி நிர்வாகம், உற்பத்தி, லாபத்தை  மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு,  அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் ஊக்கத்தொகை அளித்து  வருகிறது. இதனால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

கடந்த 9.6.2019, 7.5.2020 தற்போது ஜூலை 1, 2020 ஆகிய மூன்று விபத்துகளிலும் 19 தொழிலாளர்கள், அதி காரிகள் இறந்துள்ளனர். யூனிட் 5 மற்றும் 6 ஆகிய இரண்டி லும் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 3 விபத்துக்களிலும் கொதிகலன்கள், கொதிகலன் தாங்கி நிற்கும் பெரிய விட்டங்களில் ஒரே மாதிரியான பலத்த சத்தத்துடன் கூடிய வெடிப்புகள் பல இடங்களில் ஏற்பட்டன. இதற்கான கார ணங்களை நிர்வாகம் அமைத்துள்ள குழு ஆய்வு செய்ய வேண்டும். மத்திய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் இனியாவது முறையான பராமரிப்பு,முறையான பாதுகாப்பு என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். மாநில அரசு இவ்விபத்து குறித்து ஆய்வு கமிட்டி அமைத்து உள்ளதாக செய்தி வந்துள்ளது. அது ஓர் முழு மையான ஆய்வாக, விபத்தில்லா என்.எல்.சியை உரு வாக்கிட பயன்படவேண்டும். இறந்தவர்களுக்கும், காயமுற்றவர்களுக்கும் நிறு வனம் அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமான தல்ல. நிவாரணத் தொகைக்கு மத்திய அரசு வரம்பு தீர்மானிப்பது சரியல்ல. அனைவரும் ஏற்கதக்க  ஓர் முழு மையான நஷ்டஈடு அளிக்கப்பட வேண்டும்.