புதுதில்லி, அக்.5-
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் மனீஷாவின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் மற்றும் கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள சென்ற ஊடகத்தினரை, யோகி ஆதித்யநாத் அரசாங்கமும், காவல் துறையினரும் தடுத்து நிறுத்தியுள்ள விதம் கண்டிக்கத் தக்கது என்று இந்திய எடிட்டர்ஸ் கில்ட் (Editors Guild of India) கூறியுள்ளது.
‘எடிட்டர்ஸ் கில்ட்’, ஞாயிறு அன்று நடத்திய கூட்டத்தில் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவருடைய குடும்பத்தினரிடம்கூட ஒப்படைக்காமல் எரித்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த ஊடகவியலாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும். இதில் இதைவிட மோசமான விஷயம், அவ்வாறு ஒட்டுக்கேட்பது மட்டுமல்ல, அந்த ஊடகவியலாளரைக் குறித்து அவர்களின் மதிப்பைக் குறைத்திடும் விதத்தில் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்திடும் வேலைகளிலும் இறங்கியிருப்பதாகும்.
‘எடிட்டர்ஸ் கில்ட்‘ சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
சம்பவம் நடைபெற்ற இடத்தற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க மறுப்பதும், அவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும் ஊடகங்களின் செயல்பாடுகளைத் தடுத்து, அரித்துவீழ்த்துகின்றன. ஹத்ராஸ் சம்பவம் குறித்து விஷயங்களைச் சேகரித்திட முயலும் ஊடகவியலாளர்களை எவ்விதத்திலும் அரசாங்கம் தடுக்கக்கூடாது என்றும் அவர்கள் சென்று செய்திகளைச் சேகரிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கித்தர வேண்டும் என்றும் ‘எடிட்டர்ஸ் கில்ட்’ கோருகிறது.
அரசாங்கத்தின் தலையீட்டின் அளவு ஹத்ராஸ் சம்பவத்தில் மிகவும் மோசமான ஒன்றாகும். பொதுவாகவே தற்போது ஊடகங்களுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்கள் சமீப மாதங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது வேறு சில மாநில அரசாங்கங்களும் இதேபோன்று ஊடகவியலாளர்களுக்குத் தொல்லை கொடுத்திம், துன்புறுத்திடும் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளை ‘கில்ட்’ கண்டிக்கிறது. இதனை சரிசெய்திட வேண்டும் என்று கோருகிறது.
இவ்வாறு ‘எடிட்டர்ஸ் கில்ட்’ தன் அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.