உத்தரபிரதேசம் ஹத்ராஸில் அண்மையில் நடந்திருக்கும் நிகழ்வுகள் நாட்டை புயலெனத் தாக்கியுள்ளன. 19
வயதேயான சிறுமி அங்குள்ள வயலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த
காயமடைந்த அவர் செப்டம்பர் 29 அன்று பலியானார். அதிகாலை 2:00 மணியளவில் அவருடைய உடலை
உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் தகனம் செய்தது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்
ஒருவரின் முன்னிலையிலேயே தகனம் செய்யப்பட்டதாக அவர்கள் கூறுகின்ற வேளையில்,
பாதிக்கப்பட்டவரின் தகனத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளைச் சுற்றிலும் ஏராளமான ஊகங்கள் உள்ளன.
பாதிக்கப்பட்டவரின் தகனம் மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்றவை குறித்து பல்வேறு செய்தி நிறுவனங்கள்
வெவ்வேறு தகவல்களை வழங்கியுள்ளன என்றாலும், பாதிக்கப்பட்டவரின் உடலை அதிகாலை 2:00 மணிக்கு
உத்தரப்பிரதேச அதிகாரிகள் தகனம் செய்தனர் என்ற விஷயம் நிச்சயம் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது.
பலியானவர் ஒரு ஹிந்து. ஹிந்து மதப் பழக்கவழக்கங்களின்படி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகோ அல்லது
விடிவதற்கு முன்பாகவோ உடலைத் தகனம் செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு வழிவகுத்த
கொடூரமான செயல் குறித்து எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், மரணத்திற்குப் பிறகு
பாதிக்கப்பட்டவரின் கௌரவம் குறித்த உரிமை மீறப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க
முடியவில்லை. இந்த கட்டுரையில், இறந்த நபர் ஒருவரின் கௌரவம் குறித்து அவருக்கிருக்கின்ற உரிமை மீது
வழங்கப்பட்டிருக்கின்ற பல்வேறு தீர்ப்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு அக்டோபர் 1 அன்று, ஹத்ராஸில் நடந்த சம்பவம் குறித்து, தானாக முன்வந்து பொது நல
வழக்காக எடுத்துக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வு, இறந்த நபரின் கௌரவத்திற்கான உரிமை
குறித்து வழங்கப்பட்டிருக்கும் மூன்று தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டது.
அந்த மூன்று தீர்ப்புகள்:
• பண்டிட். பர்மானந்த் கட்டாரா எதிர் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பிறர் (1995) 3 எஸ்.சி.சி 248
• ராம்ஜி சிங் @ முஜீப் பாய் எதிர் உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் பிறர் (2009) 5 அல்ஜ் 376
• பிரதீப் காந்தி எதிர் மகாராஷ்டிரா மாநிலம் (2020) எஸ்.சி.சி ஆன்லைன் போம் 6621
பஞ்சாப் சிறை கையேட்டின்படி மரண தண்டனை விதிக்கப்படும் விதத்தை எதிர்த்து மனுதாரர் பண்டிட்
பர்மானந்த் கட்டாரா வழக்கு ஒன்றைத் தொடுத்தார். கைதியின் உடலைத் தூக்கிலிட்ட பிறகு அரை மணி நேரம்
தூக்கு கயிற்றிலேயே உடலைத் தொங்க விடுவது, அந்த நபரின் கௌரவத்திற்கான உரிமையையும், நியாயமான
முறையில் அவரை நடத்துவதையும் மீறுவதாக இருக்கிறது என்று மனுதாரர் வாதிட்டார். மனுதாரர் சார்பில்
தாக்கல் செய்யப்பட்டிருந்த முதல் குற்றச்சாட்டை நிராகரித்த போதிலும், இறந்த உடலைத் தூக்கிலிட்ட பின்னர்
அரை மணி நேரத்திற்கு அப்படியே தொங்க விடுவது அந்தக் கைதிக்கான கௌரவத்தை மீறுவதாகவே
இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அந்த தீர்ப்பின் பத்தி 3இல், ‘இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின் கீழ் கௌரவம் மற்றும் நியாயமாக
நடத்துவதற்கான உரிமை என்பது உயிருடன் இருக்கின்ற மனிதனுக்கு மட்டுமல்லாது, அவரது மரணத்திற்குப்
பிறகு அவரது உடலுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் மனுதாரருடன் ஒத்துப் போகிறோம்’ என்று
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
ராம்ஜிசிங் வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு நிறுவியிருக்கின்ற சவக்கிடங்கில் உள்ள
அவல நிலைமைகளை விவரித்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 1973 முதல் 2003 வரை 5,795
கிரிமினல் வழக்குகள் தொடர்பாக 11,590 ஜாடிகள் மனித உள்ளுறுப்புகளுடன் வைக்கப்பட்டு இருப்பதாகவும்,
அந்தப் பகுதியில் அது துர்நாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் மனுதாரர் வாதிட்டார். சவக்கிடங்கில்
நிறுவப்பட்ட ஏர்கண்டிஷனர்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் மனுதாரர் வாதிட்டார். தீர்ப்பின் பத்தி
12 இல், ‘…12. ஒரு நபர் என்பதில் இறந்த நபரைச் சேர்ப்பதை சட்டம் இதுவரையிலும் வரையறுக்கவில்லை.
இருந்தபோதிலும் உடலிலிருந்து மனிதனை உருவாக்குகின்ற உயிர் பிரிந்து விட்டாலும்கூட அதற்கென்று சில
உரிமைகள் உள்ளன. அந்த உரிமைகளை அதிலிருந்து பிரிக்க முடியாது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்திய வாரிசு சட்டத்தின் கீழ் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான உரிமை, 1994ஆம் ஆண்டு
மனித உறுப்புகள் மாற்றுச் சட்டத்தின்கீழ் உள்ள உரிமைகள் போன்று இறந்த ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கும்
சில உரிமைகள் குறித்தும் நீதிமன்றம் எடுத்துரைத்திருந்தது.
நீதிமன்றம் மேலும், ’12… உரிமை கோரப்படாது இருக்கின்ற இறந்து போன மனிதனின் உடல், உயிருடன்
இருக்கும்போது அந்த நபர் யார் என்ற அவரது அடையாளத்தை நிறுவ முடிந்தால்… அவரது மத
நம்பிக்கைகளுக்கு ஏற்ப, தகனம் செய்யப்பட வேண்டும் அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால்,
நபர் என்ற சொல் குறித்து மிகவும் குறுகலாகக் கருதக்கூடாது’ என்று கூறியிருந்தது.
இறந்த நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, சடலத்தை ஒழுக்கமான மற்றும் கௌரவமான முறையில்
தகனம் செய்வது, அந்த மனிதன் கொண்டிருந்த அல்லது கடைப்பிடித்து வந்த மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப
தகனம் செய்யப்படுவதை உறுதி செய்வது அரசின் கடமை என்றும் நீதிமன்றம் கருதியது.
பிரதீப் காந்தி வழக்கில், கோவிட்-19 வைரஸுக்கு பலியான ஒருவரின் சடலத்தை அப்புறப்படுத்துவது
தொடர்பான பிரச்சனையை மும்பை உயர்நீதிமன்றம் கையாண்டது. அதன் தீர்ப்பின் பத்தி 38இல், பண்டிட்.
பர்மானந்த் கட்டாரா வழக்கைக் குறிப்பிட்டு, ‘38... ஒழுக்கமாக அடக்கம் செய்வதற்கான உரிமை,
தனிமனிதனின் கண்ணியத்துடன் இணைக்கப்பட்ட விஷயங்களுடன் ஒத்துப் போகிறது. அரசியலமைப்பின்
21ஆவது பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழும் உரிமைக்கான அம்சமாக அது
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நெருக்கடியான காலத்தில் இறக்கும் ஒருவர் சந்தேகத்திற்கிடமான /
உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக இறந்திருக்கும் ஒருவருக்கு, இந்த நெருக்கடி
இல்லையெனில் கிடைத்திருக்கும் வசதிகளை மறுப்பதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை’ என்று
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வினீத் ருயா எதிர் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர், மேற்குவங்க அரசு
மற்றும் பிறர் வழக்கில் கல்கத்தா உயர்நீதிமன்றம் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்து கோவிட்-19ஆல்
பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அகற்றுவதற்கான கூடுதல் வழிகாட்டுதல்களை வகுத்துத் தந்துள்ளது.
இறந்த நபருக்கு இதுபோன்ற தொற்றுநோய்க்கு மத்தியிலும்கூட, அவன்/அவளுடைய மத நம்பிக்கைகளுக்கு
ஏற்ப ஒழுக்கமான அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுவதற்கான உரிமை உண்டு என்பதையே மேற்கூறிய
தீர்ப்புகள் தெளிவுறுத்தியுள்ளன.
எஸ்.சேதுராஜா எதிர் தலைமைச் செயலாளர் [WP (MD) Nol.3888 2007] வழக்கில், மலேசியாவில் இறந்து போன
தனது மகனை மனுதாரர் இழந்திருந்தார். தனது மகனின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும்
என்று மனுதாரர் விரும்பினார். அந்த வழக்கின் தீர்ப்பின் 20ஆவது பத்தியில், ‘மரணத்திற்குப் பிறகு உடலைப்
புதைப்பது அல்லது எரிப்பதாலேயே ஒரு நபரின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கும் என்றிருக்கின்ற பாரம்பரிய
நம்பிக்கையின் காரணமாக, அன்னிய தேசத்தில் இறந்த தனது மகனுக்கான இறுதிச் சடங்குகளைச்
செய்வதற்காக தந்தை ஏங்குவதில் எந்தவிதமான சர்ச்சையும் இருக்க முடியாது. எனவே, என்னுடைய
பார்வையில், இதுபோன்ற சூழ்நிலைகளில், குறிப்பாக மனுதாரர் இருக்கின்ற அசாதாரண சூழ்நிலைகளின்
அடிப்படையில், மலேசியாவிலிருந்து மனுதாரரின் மகனின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான
ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கான கடமை அரசுக்கு உள்ளது’ என்று சென்னை உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கில், அஷ்ரே ஆதிகார் அபியான் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (2002) 2
எஸ்.சி.சி 27 மற்றும் பண்டிட் பர்மானந்த் கட்டாரா வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை
மேற்கோள் காட்டியிருந்தது. பாதிக்கப்பட்டவருக்கு மரணத்திற்குப் பின் தகனம் செய்யப்படுவதற்கான
உரிமையைப் பற்றியதாக அந்த வழக்கு இருந்தது.
பொதுக்காரணம் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா [2018 எஸ்.சி.சி ஆன்லைன் எஸ்சி 208] வழக்கில்,
கௌரவத்துடன் இறக்கும் உரிமை கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமையிலிருந்து பிரித்துப் பார்க்க
முடியாத மற்றும் பிரிக்க முடியாத அம்சமாகும் என்று கருணைக்கொலை குறித்த உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற
தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
பரம்ஜித் கௌர் எதிர் பஞ்சாப் மாநில [(1996) 7 எஸ்.சி.சி 20] வழக்கில், சிரோமணி அகாலிதளத்தின் மனித
உரிமைகள் பிரிவு வெளியிட்ட 16.01.1995 தேதியிட்ட பத்திரிக்கைச் செய்திக்குறிப்பை உச்சநீதிமன்றம் ஆய்வு
செய்தது. அந்தச் செய்திக்குறிப்பில், சடலங்களை உரிமை கோரப்படாதவை என்று அறிவித்து நகராட்சி தகன
மைதானத்திற்கு காவல்துறையினர் சடலங்களைத் தவறாமல் கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப் பத்திரிகைக்குறிப்பின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த நீதிமன்றம், ‘17. கல்ரா மற்றும் தில்லான்
ஆகியோரால் விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற 1995 ஜனவரி 16 நாளிட்ட பத்திரிகைக்குறிப்பின்
உள்ளடக்கங்களைப் பார்த்து இந்த நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ள முடியாது. அந்தப் பத்திரிகைக்குறிப்பில்
கூறப்பட்டுள்ள உண்மைகள் சரியானவை என்று கண்டறியப்பட்டால் – அது ஓரளவிற்கு இருந்தாலும்கூட –
அவை மனித உரிமை மீறல்கள் தொடர்பானவையாகவே இருக்கும். ‘அடையாளம் காணப்படாதது’ என்ற
முத்திரையைக் கொண்டு ஏராளமான நபர்களின் இறந்த உடல்கள் – ஆயிரக்கணக்கில் இருப்பதாகக்
கூறப்படுபவை - இயல்பாக காவல்துறையினரால் தகனம் செய்யப்படலாம் என்பது மிகவும் பயங்கரமானது.
இதுபோன்ற செயல்கள் இந்த நாட்டில் ஒருபோதும் நடக்காது என்றே ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் மீதான
நமது நம்பிக்கை நமக்கு உறுதியளித்திருக்கிறது, ஆனால் அந்தப் பத்திரிகைக்குறிப்பில் உள்ள குற்றச்சாட்டுகள் –
பயங்கரமானவையாக இருப்பதால் - முழுமையான விசாரணை தேவைப்படுகின்றது...’ என்று தீர்ப்பு
வழங்கியது. பரம்ஜித் கௌரின் வழக்கில் கௌரவமான மரணத்திற்கான உரிமை என்னவென்பதை
உச்சநீதிமன்றம் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், காவல்துறையின் நடவடிக்கைகள் உண்மையாக
இருக்குமேயானால், அவை மனித உரிமை மீறல்களே என்று அது கூறியிருந்தது.
விகாஷ் சந்திரா @ குடு பாபா எதிர் யூனியன் ஆஃப் இந்தியா & பிறர் 2008 எஸ்.சி.சி ஆன்லைன் பாட் 905]
வழக்கில், பாட்னாவில் உள்ள மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனைக்குள்ளான உடல்களைத் தைக்காமல்,
அந்த இறந்த உடல்களை கங்கையில் வீசுவதாகக் கூறப்பட்டிருந்தது. உரிமை கோரப்படாத அல்லது
அடையாளம் காணப்படாத உடல்களை சட்டத்திற்குட்பட்டும், இறந்தவருக்கு மிகுந்த மரியாதையுடனும்
அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்று கருதுவதாகவும், இறுதிச் சடங்குகள் இறந்தவர் கொண்டிருந்த
நம்பிக்கைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அந்த வழக்கில் கூறியது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவரின் உடலில்
மஞ்சள் பூச விரும்பியதாகவும், இருப்பினும், அவ்வாறு செய்ய அந்தக் குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை
என்றும் பல செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு அக்டோபர் 1 அன்றைய அலகாபாத்
உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, விடிவதற்கு முன்னர்
உடலைத் தகனம் செய்ய முடியாது என்று காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர்
தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, ஆனாலும் அதிகாரிகள் தாங்களாகவே அதிகாலை 2:00 மணிக்கு உடலைத்
தகனம் செய்து விட்டனர். பாதிக்கப்பட்டவர் ஒரு ஹிந்து, மேலே விவாதிக்கப்பட்டிருக்கின்ற தீர்ப்புகளின்
அடிப்படையில் பார்க்கும் போது, ஹிந்து பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளின்படி பாதிக்கப்பட்டவரின்
உடலைத் தகனம் செய்ய அவருக்கு உரிமை இருப்பது தெளிவாகிறது.
ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவருக்கு அவரது வாழ்க்கையிலும், மரணத்திலும் அவருக்கான கௌரவம்
மறுக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கு வழிவகுத்த சம்பவங்களை விசாரணை அதிகாரிகள் விரிவாக
விசாரித்து அறிந்து, குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். இருந்தாலும் பாதிக்கப்பட்டவரின் மரணத்தில் அவருக்கான
கௌரவத்தை இழந்திருப்பது தெளிவாகவும், நன்கு
நிறுவப்பட்டதாகவும் இருப்பது தெளிவாகத் தோன்றுகிறது.
அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.
ராஜ்தீப் மந்தா
(நாக்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சட்டக் கல்லூரி மாணவர்
பார் அண்ட் பெஞ்ச் இணையதளம்)
https://www.barandbench.com/apprentice-lawyer/the-hathras-cremation-an-overview-of-the-right-to-
dignity-of-the-deceased
நன்றி: பார் அண்ட் பெஞ்ச்
தமிழில்: தா.சந்திரகுரு