குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக மருத்துவர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) பாய்ந்தது.
உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் கபீல் கான். கடந்த ஜனவரி 29ம் தேதி மும்பையில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போது கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2019 இல் நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக அவரை கைது செய்து செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த திங்கட்கிழமை அன்று ஜாமீன் வழங்கிய நிலையில், பல்வேறு காரணங்களை காட்டி இதுவரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவில்லை. தற்போது யோகி ஆதித்யநாத் அரசு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கை பதிவுசெய்துள்ளது.
2017 ல் குழந்தை நல மருத்துவர் கபீல் கான் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததை வெளிஉலகிற்கு கொண்டு வந்தைத்தொடர்ந்து பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.