tamilnadu

img

அலகாபாத் உயர்நீதிமன்றம் பிழை செய்துள்ளது - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

புதுதில்லி:
“மனம் ஒப்பித் திருமணம் செய்துகொண்டுள்ள எங்களுக்கு, எங்கள் இருகுடும்பத்தாரிடமிருந்தும் அல்லது காவல்துறையினரிடமிருந்தும் வலுக்கட்டாயமாக எங்களைப் பிரித்திடும் முயற்சிகளிலிருந்து எங்களுக்குப்பாதுகாப்பு கொடுக்க வேண்டும்,” என்று வந்த இளம் தம்பதிகளைப் பாதுகாக்க முடியாது என்றுஅலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்திருப்பது முற்றிலும் பிழையான ஒன்று என்று கடுமையாகஉணர்வதாக மாதர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மாலினி பட்டாச்சாரியா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லேமற்றும் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் கீர்த்தி சிங்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இளம் தம்பதிகள் இருவரும் இந்து சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொண்டபின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை ஒரு ரிட் மனு மூலமாக அணுகியிருக்கிறார்கள். ஆண்மகன் இந்துவாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், பெண் இஸ்லாம் மதத்திலிருந்து இந்துயிசத்திற்கு மாறியிருந்தார். உயர்நீதிமன்றம், இவ்வாறு இந்தப்பெண்மணி இந்துயிசத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் மாறியிருக்கிறார்என்றும், இவ்வாறு மதம் மாறியது நேர்மையான ஒன்று அல்ல என்றும், இந்து ஆணைத் திருமணம்செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இவ்வாறு மதம் மாறியிருக்கிறார் என்றும், எனவே இதில் தலையிடுவதற்கில்லை என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.

பாதுகாப்பளிக்க மறுப்பு...
இது, மணமக்கள் அவர்களின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டிருப்பதற்கு எதிராகநீதிமன்றம் இருக்கிறது என்பதையும், திருமணம் செய்து கொண்டுள்ள தம்பதிகளுக்கு மட்டுமே பாதுகாப்புத் தேவைப்படும் என்று பத்தாம்பசலித்தனமாக நம்புவது போன்றுமே காட்டுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு வன்முறை மற்றும் அனைத்துவிதமான கிரிமினல் குற்றச்செயல்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்க மறுத்திருப்பதோடு, அவர்களின் திருமணத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் வந்துள்ள முந்தைய தீர்ப்புகள் எல்லாம் கிரிமினல்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுவதற்கு, இவ்வாறு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் தங்கள் திருமணங்களை சிவில் சட்டத்தின்கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தன. எனினும்இப்போது நீதிமன்றம் ‘கௌரவம்’ என்ற பெயரில் இதுபோன்ற தம்பதிகளுக்கு எதிராக விரிவான அளவில் குற்றங்கள் அதிகரித்திருப்பதும், கொல்லப்படுவதும் நடந்துகொண்டிருக்கின்றன என்று தெரிந்தும்கூட, இந்தத் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்திருக்கிறது.   

உ.பி.முதல்வரின் மிரட்டல்
இந்தத் தீர்ப்புரையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, உத்தரப்பிரதேச முதல் அமைச்சர், யோகி ஆதித்யநாத், மீண்டும்‘புனித ஜிகாத்’ (‘Love Jihad’) என்று அழைக்கப்படுவதற்கு எதிராக ஒரு யுத்தத்தைப் பிரகடனம் செய்திருக்கிறார். எந்தவொரு முஸ்லீம் பையனோ, ஓர் இந்து பெண்ணை மதம் மாற வைத்துத் திருமணம் செய்துகொண்டால், அநேகமாக அவர் இறக்க வேண்டியிருக்கும் என்று அறிவித்திருக்கிறார்.  இதுபோன்ற திருமணங்களுக்கு எதிராக ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவர இருப்பதாகவும் மிரட்டியிருக்கிறார். யோகி, இந்துப் பெண்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் இவ்வாறு பிரகடனம் செய்திருக்கிறார். 

உண்மையில் ‘புனித ஜிகாத்’ கோட்பாட்டின் கீழ் இந்தியாவில் தேசியப் புலனாய்வு முகமையோ அல்லது வேறெந்த காவல்துறையோ இந்தியாவில் எங்குமே எவ்விதமான வழக்கையும் விசாரித்ததாக சாட்சியம் எதுவும் இல்லாத நிலையில்தான் யோகிஆதித்யநாத் இவ்வாறு பிரகடனம் செய்திருக்கிறார். எனினும் பாஜக-வினரும் அவர்களின் ஆதரவாளர்களும் தொடர்ந்து இந்தப் பிரச்சனையை பல முறை எழுப்பியிருக்கின்றனர். 

மகளிர் ஆணையத் தலைவர்...
மகளிர்க்கான தேசிய ஆணையத்தின் தலைவரேகூட இரு மதத்தினர்க்கிடையே திருமணம் செய்துகொண்ட டாட்டா நிறுவனத்தின் விளம்பரத்திற்கு எதிராகப் பேசியதைப் பார்த்தோம். இதன் காரணமாக டாட்டா அந்த விளம்பரத்தை நீக்கக் கட்டாயப்படுத்தப்பட்டார்.பாஜக,  வயது வந்த ஆண்-பெண் தங்கள் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்வதற்கு எதிராக, அதிலும் குறிப்பாக சாதிக் கலப்பு மற்றும்மதக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக இருக்கிறது. இதனால் இளம் தம்பதிகளுக்கு ஏற்படும் கடும் துன்ப துயரங்கள் குறித்தும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. வயது வந்த ஆண்கள்-பெண்கள் எவ்விதமான தாமதமோ அல்லது இடையூறுகளோ இல்லாமல் திருமணம் செய்துகொள்வதற்கு வழிவகுக்கும் விதத்தில் சிறப்புத் திருமணச் சட்டம்திருத்தப்படுவதற்கு இதுவே சரியான தருணமாகும்.  வயதுவந்த ஆண்களும்-பெண்களும் தங்கள் மனம் ஒப்பி மணமகனையோ, மணமகளையோ தேர்வு செய்துகொள்வதற்கான உரிமையை அளிக்கும் விதத்திலும், இதற்கு எதிராககொடூரமாகவும் மனிதாபிமானமற்ற இழிசெயல்கள் மூலமாகவும் இவர்களின் உறவுகளைத் தடுப்பதற்கு ஈடுபடுபவர்களைத் தண்டித்திடும் விதத்திலும் ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ந.நி.)