உடுமலை, மே 21-உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதல்நாள் கலந்தாய்வில் 215 மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளான பிஏ.தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், பிஎஸ்சி.கணிதம், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், தாவரவியல்,கணினி அறிவியல், வணிகவியல்(பிகாம்),வணிகவியல் கணினி பயன்பாடு (பிகாம்.சிஏ.), வணிகவியல் மின் வணிகம்(பி.காம்.இ.காம்), வணிக நிர்வாகவியல் (பிபிஏ) ஆகியவை சுழற்சி முறையில் முதல் ஷிப்டிலும், வணிகவியல் பிகாம்,வணிகவியல் கணினி பயன்பாடு (பிகாம்.சிஏ), கணினி அறிவியல் ஆகியவை 2-வது ஷிப்டிலும் கற்பிக்கப்படுகின்றன.இந்த கல்லூரியில் 2019- 20-ம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளில் 814 இடங்களுக்கு 1,860 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 15-ந்தேதி வெளியிடப்பட்டது.தரவரிசைப்பட்டியல்படி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்களன்று தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான(விளையாட்டு,மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர்) கலந்தாய்வு நடந்தது. இதைத்தொடர்ந்து தரவரிசைப்படி கலந்தாய்வு நடந்தது. திங்களன்று நடந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள மொத்தம் 347 மாணவ,மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.ஆனால் 220 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதில் மொத்தம் 215 மாணவ,மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கான உத்தரவுகளை மாணவ, மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வழங்கினார். தரவரிசைப்படி வியாழக்கிழமை (மே 23) வரை கலந்தாய்வு நடக்கிறது.