tamilnadu

img

உன்னாவ் சிறுமியின் தந்தை கொலை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குற்றவாளி - தில்லி நீதிமன்றம் தீர்ப்பு

உன்னாவ் சிறுமியின் தந்தை கொலை வழக்கில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் குற்றவாளிகள் என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அருகிலுள்ள பங்கார்மாவு தொகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததால், பாஜக எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கட்சியில் இருந்து அவரை பாஜக தலைமை நீக்கியது. குல்தீப் சிங் செங்கார் மீது போக்ஸோ சட்டம், பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் பாதிப்புக்குள்ளான சிறுமி, காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப் பெறக்கோரி சிறுமியின் தந்தையை, குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், கடுமையாக தாக்கினர். ஆனால், அங்கு வந்த போலீஸார், செங்காரின் ஆதரவாளர்களைக் கைது செய்யாமல் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறைக்குள் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி சிறுமியின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கிலும் எம்எல்ஏ குல்தீப் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் குற்றவாளிகள் என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 
 

;