குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானது என்று டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் 1 தேர்வை 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையில் 9050 பேர் மெயின் தேர்வுக்கு தகுதியடைந்தனர். ஆனால் இந்த தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் பல குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானது என்ற ஒப்புக்கொண்டார். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என்ற கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் போட்டி தேர்வில் தவறான கேள்விகள் கேட்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. இதுகுறித்து உரிய விளக்கம் தேவை என்ற கூறி வரும் திங்கள் கிழமை டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.