காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய்யான செய்திகளை பரப்புவதாக மாணவர் இயக்கத்தின் தலைவர் ஷேக்லா ரஷீத் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கடந்த 5 ம் தேதி ஜம்மு காஷ்மீர் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மோடி அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் திறந்த வெளி சிறைச்சாலைபோல் உள்ளது என்று பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஷேக்லா ரஷீத் தனது டுவிட்டர் பக்கத்தில் காஷ்மீரில் தொடர்ந்து மோடி அரசின் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகள் மற்றும் ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து வந்தார்.,
அதில் அப்பாவிகளை ராணுவம் கொடூரமாக சித்திரவதை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ராணுவத் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் ஷேக்லா ரஷீத் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அலாக் அல்லோக் ஸ்ரீவஸ்தவா இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், இந்திய ராணுவத்துக்கு எதிராக பொய் செய்திகளை ஷேக்லா ரஷீத் பரப்புகிறார். சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்புக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். தேசதுரோக பிரிவான 124-ஏவின் கீழ் ஷேக்லா ரஷீத் மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்கிறது. மேலும் இருபிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் 153, 153-ஏ, 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்களை செய்திருக்கிறார். இதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.