tamilnadu

img

சபரிமலை வழக்கு 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்ற வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு செயல்படுத்த முயன்றபோது அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் சங்கபரிவார் அமைப்புகள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். 
இதையடுத்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 4 புதிய ரிட் மனுக்கள் உள்ளிட்ட 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது சீராய்வு மனுக்களுக்கு ஆதரவாக வும் எதிராகவும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர். நாயர் சர்வீஸ் சொசைட்டி, சபரிமலை கோயில் தந்திரி, கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஆதரித்தது. சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து நீதிமன்றம் கவலைப்படக் கூடாது எனவும் கேரள அரசு கூறியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலில் எதிர்த்த தேவஸ்வம் போர்டு பிறகு தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனு மதிக்க வேண்டும் என்றது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு 7 நீதிபதிகள்  கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. 5 பேர் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் 7 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளனர். வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையே தொடரும் என்று நீதிபதிகள்  தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.