tamilnadu

img

மனுஸ்மிருதி விவகாரம்: திருமா மீதான வழக்கு தள்ளுபடி...

சென்னை:
மனுஸ்மிருதி பற்றி  அவதூறாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட காணொலி கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி, பெண்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், பாஜக மற்றும் சங்பரிவார் கூட்டம் இந்துப் பெண்களை திருமாவளவன் இழிவாக பேசிவிட்டார் என்று உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு உள்ளிட்ட பலரும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், மனுஸ்மிருதியை தடைசெய்யக் கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். இதற்கிடையில், திருமாவளவன் மீது நடவடிக்கை மேற் கொள்ளும்படி, மக்களவை செயலாளருக்கு உத்தரவிட கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக் கல் செய்தார். அந்த மனுவில், “2, 200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல.  அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது” எனத் தெரிவிக்கப் பட்டிருந் தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, “மனுஸ்மிருதி சட்ட புத்தகமும் இல்லை. மனுஸ்மிருதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா? என்பதும் தெரியவில்லை. நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்”.எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப் பட்டது.இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.இதனையடுத்து, மனு ஸ்மிருதி பற்றி அவதூறாக பேசிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இவ் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.'