ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மோடி அரசு ரத்து செய்ததற்கு எதிரான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்புடையதா என்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்து உத்தரவிட்டது. மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர்கள் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.சுபாஷ் ரெட்டி. பி.ஆர்.கவாய் சூரியகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகினார். அப்போது உச்சநீதிமன்றம் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்துவிட்டது.
முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கையை கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது