tamilnadu

img

சீருடைப்பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

எல்லா தேர்விலும் முறைகேடு நடப்பது  கேலிக்கூத்து: நீதிபதி

சென்னை,பிப்.20- தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறை களை நிறுத்திவைக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மேலும்  தமிழகத்தில் எல்லா தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறுவது கேலிக்கூத்தாக உள்ளதாக நீதிபதி அதிருப்தியுடன் தெரிவித்தார். இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணி யிடங்களுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது.எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

மனுவை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ் பாபு, தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர் தேர்விலும் முறைகேடுகள் நடப்பது கேலிக்கூத்து .அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும். குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எப்படி தேர்வானார்கள்?  அனைவரும் எப்படி 69.5 என ஒரே மதிப்பெண்கள் பெற்றார்கள்? எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்த இருவர் எப்படி உடல் தகுதி தேர்வில் பங்கேற்றார்கள்? என்றும், இதுபோன்ற காவலர்கள் பணியில் சேர்ந்தால் காவல்துறை நிலை என்ன ஆவது ? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார் . மேலும் கூறுகையில், தமிழர்களாகிய நாம் நேர்மையை இழந்துவிட்டோம். கிராமப்புற மக்கள் அரசு வேலையை பெரிதாக நினைக்கின்றனர். முறைகேடு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளால் அவர்கள் எண்ணம் மாறும் என்று தெரிவித்த நீதிபதி,  சீருடைப்பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை குறித்து மார்ச் 5 ஆம் தேதிக்குள் காவல்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும்  அதிரடியாக உத்தரவிட்டார்.