tamilnadu

img

உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை - பாஜக எம்.எல்.ஏ குற்றவாளி என தீர்ப்பு

உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது இளம் பெண்ணை முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் சேன்காரால் கடத்தி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். எனினும், இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்து வந்தனர். புகாரை திரும்பப் பெறுமாறு போலீசார் தாக்கியதில் இளம்பெண்ணின் தந்தை, காவல் நிலையத்திலேயே மரணமடைந்தார். 

இதை அடுத்து எதிர்க்கட்சிகள் தலையீட்டுக்கு பிறகு, போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை லக்னோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது வழக்கறிஞர், தாயாருடன் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றபோது, காரின் மீது லாரி மோதியதில் அவரது உறவினர் மற்றும் வழக்கறிஞர் மகேந்திர சிங் ஆகியோர் உயிரிழந்தனர். இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த இளம்பெண் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கள்ளத்துப்பாக்கி வழக்கு, சிறை மரணம் மற்றும் அதன் தொடர்புடைய இதர வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த பெண்ணுக்கு உத்தர பிரதேசம் மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், கார் விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் சி.பி.ஐ. முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்றாடம் விசாரணை நடத்தி 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதற்கிடையே, குல்தீப் சிங் செங்காரை கட்சியில் இருந்து நீக்கியதாக பாஜக தலைமை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக தில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் ’போக்சோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா பதிவு செய்துகொண்டார். இதை அடுத்து, தொடங்கிய விசாரணையில் சி.பி.ஐ. தரப்பில் 13 சாட்சிகளும், குல்தீப் சிங் செங்கார் தரப்பில் 9 சாட்சிகளும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் போக்சோ வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 19-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.