tamilnadu

img

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து நீக்கம்

சென்னை, ஆக. 20 - சென்னை தாம்பரத்தில் பாரம்பரியமிக்க கிறிஸ்தவக் கல்லூரி உள்ளது. இங்கு விலங்கியல் துறையில் பயிலும் மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகியோர் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்கும்போது மனுவை தள்ளுபடி செய்ததோடு, “கிறிஸ்துவ மிஷனரிகள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர் காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது’’ என்று வழக்கிற்கு தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்தார். 

அதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு பிஷப் கவுன்சில், தமிழ்நாடு லத்தீன் பிஷப் கவுன்சில், தமிழ்நாடு கிறிஸ்தவ அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் ஆட்சேபணை தெரி வித்ததோடு,  அவற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று  கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் நீதிபதி வைத்திய நாதன் தெரிவித்த கருத்துக்கள், வழக்கிற்கு தொடர்பில்லாமல் இருப்பதாக செவ்வாயன்று (ஆக.20) கிறிஸ்தவக் கல்லூரி தரப்பில் முறையீடுசெய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மேற்படி ஆட்சேப ணை கருத்துக்களை நீக்குவதாக தெரிவித்தார்.

மாதர் சங்கம் கருத்து

நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை குறித்து மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி  கருத்து தெரிவிக்கையில், “பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருக்கவும், அதிலிருந்து அப்பாவி ஆண் இனத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளதையும் திரும்பப் பெற வேண்டும். நீதிபதியின் இத்தகைய கருத்தானது பாதிக்கப்பட்ட பெண்களின் மீது இரண்டாவது முறையாக தொடுக்கப்படும் தாக்குதலாகவே மாதர் சங்கம் கருதுகிறது” என்றார். “நீதிபதி தனிப்பட்ட முறையில் ஒரு பிரச்சனை மீது குறிப்பிட்ட பார்வை கொண்டிருக்கலாம். ஒரு சித்தாந்தத்தை பின்பற்றலாம். ஆனால், நீதி பரிபாலனம் செய்யும் போது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் கருத்து தெரிவிக்கவும், தீர்ப்பு வழங்கவும் வேண்டும்” என்றும் கூறினார்.