புதுக்கோட்டை, ஆக.6- சிஐடியு தொடர்ந்த வழக்கில் அறந்தாங்கி நகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.13725 வழங்க உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத் தலைவர் ப.சண்முகம் கூறியது: அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்துவரும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தம் முற்றுகைப் போராட்டம் ஆர்ப்பாட்டம் என கடந்த காலத்தில் பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) முன்பாக தொழில் தாவாவும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் கடந்த 18.09.2018 அன்று அரசாணைப்படி குறைந்தபட்ச சம்பளம் தருவதாக சிஐடியு சங்கத்தோடு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அரசாணைப்படியும் ஒப்பந்தப்படியும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் தற்காலிக பணியாளர்கள் தினக்கூலிப் பணியாளர்கள் மற்றும் குறிப்பிட்ட பணிக்காக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு G.O.M.S.2(D) No,.62-ன்படி குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.13725 வழங்கிட நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டுமென உள்ளாட்சித் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்றார்.