மதுரை:
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என்றும், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே இது பொருந்தும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை. நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ராதாதேவி தாக்கல் செய்த பதில் மனுவில், 862 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்றும், மேலும் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல்; அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதைக் கண்காணிக்க ஆறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையும் தாக்கல் செய்தார்.இந்த அறிக்கையைப் படித்த நீதிபதிகள் கோபமடைந்து, “இந்த அறிக்கையில் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தவறான தகவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வரியில் ஊழல் அதிகாரிகளைக் கண்காணிக்க குழு அமைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெறவில்லை என்றால் 105 அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இது போன்ற தவறான தகவலை தெரிவிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும்” என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், “இரவு, பகல் பாராமல் தங்கள் விவசாய நிலங்களில் பாடுபட்டு தங்களது நெல் மூட்டைகளை விற்பனை மையங்களுக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன? லஞ்சம் வாங்குவது புற்றுநோயைவிடக் கொடியது. லஞ்சம் நாட்டை புற்றுநோய் போல் அரித்துக்கொண்டிருக்கிறது.
இதனால் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது” எனவும் சாடினர். மேலும், இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் எதிர் மனுதாரராக வேளாண்மை துறை செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது; ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட “அரசுத் துறைகளில் லஞ்ச ஒழிப்பு குறித்து” ஆய்வு செய்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.