tamilnadu

img

மேலவளவு வழக்கு: 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்?: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மேலவளவு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேர் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 

மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர், எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
மாநிலத்தை உலுக்கிய கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டனை காலம் முடிவதற்குள் விடுதலை செய்த தமிழக அரசின் உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ரத்தினம் விடுதலை செய்தது குறித்து வழக்கு தொடர  விடுதலை செய்ததற்கான அரசாணை தேவை என்று கோரினார். ஆனால் இன்னமும் அரசாணை கிடைக்கப்பெறவில்லை. இதனால் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்த அரசாணை  நகலை வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . அப்போது ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசுத் தரப்பில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அரசாணைகள் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.  மனுதாரர் தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நீதிபதிகள் மேலவளவு ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். சமூகத்தில்  என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வு செய்துதான் முடிவெடுக்கப்பட்டதா? குற்றவாளிகள் விடுதலை  தொடர்பான ரத்தினத்தின் மனு எந்த அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது. என்பது குறித்தும் நீதிமன்றம் அறியவிரும்புகிறது. ஆகவே இது தொடர்பாக தமிழக அரசு மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கூறினர்.  இந்த விவகாரத்தில் எதிர்த்தரப்பினர் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதால் இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மேலும் ரத்தினம் தரப்பில் 13 பேர் விடுதலை செய்யப்பட்ட  அரசாணையை ரத்து செய்ய மனுதாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி  அளித்த நீதிபதிகள் இந்த வழக்கை வரும் நவம்பர் 25 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.