91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர் என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஒன்றாக நாடு முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றன. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். சிலர் நடந்து செல்லும் வழியிலேயே பசியால் உயிரிழந்தனர். இதுகுறித்து பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக மத்திய அரசு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் மே 1-ம் தேதியில் இருந்து தற்போது வரை 91 லட்சம் பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களில் 84 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளிடம் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தது. வெளி மாநில தொழிலாளர்களுக்கு மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.