tamilnadu

img

இந்நாள் டிச. 06 இதற்கு முன்னால்

1922 - இங்கிலாந்திலிருந்து பிரிந்து, ஐரிய விடுதலை நாடு(அயர்லாந்து) உருவானது. 1066இல் இங்கிலாந்துக்குள் நுழைந்து, பெரும்பகுதி யைக் கைப்பற்றிய நோர்மன்கள், 1169இல் அயர் லாந்தையும் கைப்பற்றினர்.  ஆங்கிலேயர்களுடன் கலந்து ஆங்கிலோ-நோர்மன்களாக அயர்லாந்துக் குள் நுழைந்து, அங்கிருந்த தொல்குடிகளான கேயலிக் மொழிகள் பேசிய கேயல்களுடன் கலந்து, ஹைபர்னோ-நோர்மன்கள் என்ற இனத்தை உருவாக்கியிருந்தனர். 1350களுக்குப்பின் கேயல்கள் மீண்டும் எழுச்சி பெற்றாலும், அயர்லாந்தைக் கவனிக்கும் நிலையில் இங்கிலாந்து முடியரசு இல்லை.

கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்திருந்த நிலையில், அமெரிக்காவுக்குச் செல்லும் வழி என்ற வகையில் அயர்லாந்து முக்கியத்துவம்பெற, அதனைக் கைப்பற்றும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே 1541இல் இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி, தன்னை அயர்லாந்தின் அரசராக அறிவித்துக்கொண்டார். 1601இல் கேயல்கள் வீழ்ந்ததையடுத்து, இங்கிலாந்தின் ஆளுகையின்கீழ்வந்த அயர்லாந்தில் ஏராளமான ஆங்கிலேயர்கள் குடியேறினர். அயர்லாந்திலிருந்தவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்த நிலையில் குடியேறிய ஆங்கிலே யர்கள் பிராட்டஸ்டண்ட்கள் என்பதால், நிலவுடைமையிலிருந்த ஏற்றத்தாழ்வுகள் மத மோதல்களாக வெடித்து, அதிகாரம் பிராட்டஸ்டண்ட்கள் கைக்கு வந்தது.

1801இல் கிரேட் பிரிட்டன், அயர்லாந்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடியரசு என்ற பெயரில், இங்கிலாந்தின் பகுதியாகவே அயர்லாந்தை இணைத்துவிட்டு, எதிர்த்த கத்தோலிக்கர்க ளுக்கு சில சலுகைகளை வழங்கி முடித்தனர். 1840களில் அயர்லாந்தில் ஏற்பட்ட கடும் பஞ்சங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிர்ப்பை வலுப்படுத்தியதில், 1860களில் தன்னாட்சி இயக்கம் உருவானது. இங்கிலாந்துக்குக் கட்டுப்பட்ட தன்னாட்சி நான்கு முறை வழங்கப் பட்டாலும், 1919இல் ஐரிய விடுதலைப்போர் வெடித்ததைத் தொடர்ந்து, அயர்லாந்தைத் தனி நாடாக்க இங்கிலாந்து ஒப்புக்கொண்டது.  இங்கிலாந்துக்கு ஆதரவானவர்களான, பழைய ஆங்கிலேயர்கள் என்றழைக்கப்பட்ட ஹைபர்னோ-நோர்மன்கள் அதிகமிருந்த ஆறு கவுண்ட்டிகள்(கவுண்ட் ஆளுவது கவுண்ட்டி, பிரான்சில் நடைமுறையிலிருந்த இச்சொல்லை நோர்மன்கள் இங்கிலாந்துக்குக் கொண்டு வந்தனர்!) இதை ஏற்காததால் மீதமுள்ள 26 கவுண்ட்டிகள் அயர்லாந்து என்ற தனி நாடாகிவிட, கிரேட் பிரிட்டன், வட அயர்லாந்து ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முடியரசு என்ற தற்போதைய வடிவத்தை இங்கிலாந்து பெற்றது. 1922இல் டொமினியனாகி, 1937இல் இங்கிலந்தின் மேலாதிக் கத்திலிருந்து விடுபட்ட அயர்லாந்து, 1949இல் முழுமையான குடியரசாகியது.

- அறிவுக்கடல்