கோபி, மே. 6- நீட் தேர்விற்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறையை பொருத்தவரையிலும் 80 சதவிகித பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அச்சங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு முதல்வரின் ஒத்துழைப்போடு அப்பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் பள்ளி திறந்த ஒருவார காலத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்னும் ஒரு தேர்வு பாக்கியுள்ள நிலையில் கொரொனா தொற்றுக்கு தீர்வு கண்டவுடன் அந்த தேர்வு எந்த தேதியில் நடைபெறும் என்பதை பின்னர் அறிவிக்கப்படும். மேலும், நீட் தேர்வுக்கு மே 6 ஆம் தேதி காலை 11 மணியளவில் நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அனைவருக்கு இலவசமாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கம் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இடைவெளியில்லாமல் நடைபெறாது, பொதுத்தேர்வு அட்டவணையை பொறுத்தவரை இடைவெளி இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.