tamilnadu

img

உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து ஜூன் 22 ல் ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை

ஈரோடு, ஜூன் 4-விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் உண்ணாவிரதம் மேற்கொள்வது என விவசாயசங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்குபெற்ற மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டமைப்பின் ஈரோடு மாவட்டஒருங்கிணைப்பாளர் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஏ.எம்.முனுசாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள், சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் ராஜேந்திரன், கவின், மோகன், ராஜாத்தி, சுரேஷ், முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், தேர்தல் முடியும் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் விவசாயிகளின் அனுமதியின்றி உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. விவசாயிகளை காவல்துறை மூலம் மிரட்டி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து வரும்ஜூன் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம்நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் ஜூன் 22 ஆம் தேதி பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும் முற்றுகையிடப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.