tamilnadu

img

இலங்கையில் பதற்றச் சூழல்

கொழும்பு, ஜுன் 4 -இலங்கை அரசில் அங்கம் வகித்துவந்த ஒன்பதுமுஸ்லிம் அமைச்சர்களும் ஒரே நேரத்தில் பதவி விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 250க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய இலங்கை முஸ்லிம் அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டதாக அரசு அறிவித்தது. பலரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்கும் இந்த குண்டுவெடிப்பில் பங்கு இருக்கிறது என்ற புத்த மத பிக்குகள் சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். இதன் உச்சகட்டமாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் புத்த பிக்குவுமான அதுரேலிய ரத்ன தேரோ கடந்த வெள்ளிக்கிழமை முதல் கண்டியில் இருக்கும் டாலடா மாலிகவா புத்தக் கோயிலுக்கு எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார். அமைச்சர் ரிஷாத் பதியூதீன், ஆளுநர்களாக இருக்கும் ஹிஸ்புல்லா, ஆசாத் சேலி ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்கி, விசாரணைக்கு இடையூறின்றி நடக்கச் செய்ய வேண்டும் என்று கூறி, இஸ்லாமிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து இலங்கை முழுவதும் பதற்றம் பற்றியது. 

ஏற்கனவே ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு இலங்கை முஸ்லிம் சமுதாயம் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், புத்த பிக்குவின் போராட்டம் இலங்கை அரசியலில் புயலைக் கிளப்பியது. ஏற்கனவே முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட புத்த பிக்குகள், திங்கள் காலை ஊர்வலமாகச் சென்று ரத்ன தேரோவை சந்தித்து அவருக்கு ஆதரவு அளித்தனர். கண்டியில் 10,000த்துக்கும் மேற்பட்ட பௌத்தர்கள் திரண்டு, ‘முஸ்லிம்களை அதிகாரத்தில் இருந்து சிறிசேனா அப்புறப்படுத்தவில்லை என்றால் போராட்டம் தொடரும்’ என்று மிரட்டினர். இதையடுத்து மேற்குறிப்பிட்ட இரு மாநில ஆளுநர்களும் ராஜினாமா செய்தனர்.

இந்தச் சூழலில்தான் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கேபினட் அமைச்சர்கள் உட்பட ஒன்பது அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் ஹக்கீம் கொழும்பில் அறிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், “குண்டு வெடிப்புக்குப் பிறகு ஒட்டுமொத்த முஸ்லிம் சமு தாயத்தையுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வகையில் தொடர்ந்து மத, இன விரோத வன்முறைப் பேச்சுகளும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்தும் வகையில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுகிறோம். ஒரு மாத காலத்துக்குள் அரசு உரிய விசாரணை நடத்தி எங்களில் எவரேனும் குண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடையவர் என்று நிரூபித்தால் கைது செய்யட்டும், தண்டனை தரட்டும்” என்று கூறினார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளரான சுமந்திரன், “இனவாதிகளின் அச்சுறுத்த லால் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியிருப்பது துரதிர்ஷ்டவமானது. நேற்று தமிழர்களான நாங்கள், இன்று முஸ்லிம்கள், நாளை இந்த இனவாதிகளால் பாதிக்கப்படப் போவது யாரோ? நாங்கள் முஸ்லிம்களின் பின்னால் நிற்போம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.