tamilnadu

img

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

இலங்கையில் ஞாயிறன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 


இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக இலங்கை ஊடகங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. தாக்குதலில் பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதலே என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு சர்வதேச நாடுகள் பலவும் தங்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றன. 

மேலும், பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 6 மணியுடன் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை போலீஸார் 24 பேரை இதுவரை கைதுசெய்திருக்கிறார்கள். அவர்கள், குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்தவர்கள், 3 மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அவர்களில், கொழும்பு நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த வெளிநாட்டினர் 11 பேர் இறந்ததாக, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது. அதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேரும், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த ஒருவரும், துருக்கியைச் சேர்ந்த இருவரும், மேலும் இருவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 9 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கொழும்பு பண்டாரநாயக்கே விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டைக் கண்டுபிடித்த இலங்கை போலீஸார் பின்னர் அவற்றை செயலிழக்கச் செய்திருக்கிறார்கள். தாக்குதல் நடைபெற்றபோது, வெளிநாட்டில் இருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, நாடு திரும்பியிருக்கிறார். அவர் தலைமையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்தத் தாக்குதலில், இந்தியர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.



இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இலங்கைக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரின் விளக்குகள் நேற்று நள்ளிரவில் அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


;