இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம், 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு, விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில், இரண்டாம் உலகப் போரின் போது, 1940-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானத்தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்பிற்கு விமானப் போக்குவரத்து இருந்து வந்தது. கடந்த 1983-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, விமான தளம் ராணுவ பயன்பாட்டில் மட்டும் இருந்தது.
இந்நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு, விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜஃப்னா சர்வதேச நிலையம் என்று அழைக்கப்படும் இந்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னை, திருச்சி, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.