tamilnadu

img

திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவிப்பு-

   நோயாளிகளை அலட்சியப்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு                                                  

தரங்கம்பாடி மார்ச்-29, நாகை மாவட்டம்,திருக்கடையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி ஏழை,எளிய மக்கள் கடும் அவதியடைவதாகவும்,போதிய மருத்துவர்கள்,பணியாளர்கள் இல்லாமல் சிகிச்சைப்பெற முடியாமல் தவிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.முக்கிய ஆன்மீக சுற்றுலா மையங்களில் ஒன்றான திருக்கடையூருக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அமிர்தகடேஷ்வரர் ஆலயத்திற்கு  ஆயிரக்கணக்கனோர் வந்து செல்லும் நிலையில்  திருக்கடையூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள அபிஷேகக்கட்டளை, பிச்சக்கட்டளை,கிள்ளியூர், காடுவெட்டி, டி.மணல்மேடு, சீதைசிந்தாமணி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருக்கடையூரிலுள்ள பழமையான சிறிய கட்டிடத்தில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையே  நம்பியுள்ளனர்.ஏற்கனவே முறையான அடிப்படை வசதிகளும் ,போதிய மருத்துவர்கள்,மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் சாதாரண நோய்களுக்கும் கூட இங்கு சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.கொரோனா நோய் தொற்று தீவிரமடையும் இச்சூழலிலும் சாதாரண நோய்களுக்குக்கூட  இந்த மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிப்பதற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை.பிற பணிகளை செய்யும் ஊழியர்களே காயங்களுக்கு தையல் போடுவது,ட்ரிப்ஸ் போடுவது போன்ற செவிலியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து நோயாளிகளை அச்சமடைய வைப்பதாகவும்,இரத்தம்,சிறுநீர் பரிசோதனை செய்யும் வசதிகளும் இதுவரை செய்யப்படாததால் சாதாரண மருந்தகம் போலவே இயங்குவதாகவும்,இங்கு பணியாற்றுகின்ற சில ஊழியர்கள் சிகிச்சைக்காக வருபவர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் அகில இந்திய மனித உரிமை கழக மாநில அமைப்பாளரும்,முன்னாள் ஊராட்சி தலைவருமான அமுர்த .விஜயகுமார் கூறுவதோடு முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் திருக்கடையூரிலுள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீனப்படுத்தி கூடுதல் மருத்துவர்களை நியமித்து ,தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் தரம் உயர்த்தி 24 மணி நேரமும் இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஏழை,எளிய மக்கள் நம்பியுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை  சரிசெய்ய மாவட்ட சுகாதாரத்துறை இனியாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூறியுள்ளார்.