tamilnadu

சிலிண்டர் வெடித்து குழந்தை உட்பட 3 பேர் பலி... முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.....

ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வீட்டில் சமையலின் போது எரிவாயு உருளை தீப்பற்றி வெடித்ததில் தீக்காயம் அடைந்தும், இடிபாடுகளில் சிக்கியும் மூவர் உயிரிழந்தனர்.காயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆரணி புதுக்காமூர் தெருவில் உள்ள சந்திரா என்பவர் வீட்டில் சமையலின்போது எரிவாயு உருளை தீப்பற்றி வெடித்தது. இதனால் சந்திரா வீடும், அருகில் உள்ள முத்தாபாய் வீடும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இடிபாடுகளில் சிக்கிய சந்திரா நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தார். காயமடைந்த காமாட்சியும் ஒரு குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.
முத்தாபாய், மீனா, ஜானகிராமன் உட்பட 4 பேருக்கு மருத்துவமனை யில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எரிவாயு உருளை தீப்பற்றிய விபத்தில் மூவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர்...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,"ஆரணி அருகே சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், சாதாரண காயமடைந்த வர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களது வீடுகளில் கவனமாக, எச்சரிக்கையாக எரிவாயு சிலிண்டரை உபயோகிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.