tamilnadu

img

இராஜபாளையம் நகராட்சி நடத்தும் கெடுபிடி வசூலை நிறுத்திடுக : சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், மார்ச் 24- இராஜபாளையம் நகராட்சி நிர்வாகம், பொது மக்களிடம் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண பாக்கிகளை கெடுபிடியாக வசூலித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் தொழில் நசிந்து வரும் நிலையில் வசூலை ஒத்தி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியாக இராஜபாளையம் நகராட்சி விளங்கி வருகிறது. இந்நிலையில் மார்ச்  மாதம் இறுதிக்குள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைப் பாக்கிகளை வசூ லிக்க இந்நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து ள்ளது. இதற்காக பொது மக்களிடம் கெடுபிடியாக வசூலை நடத்தி வருகிறது. கடந்த வாரம், வரி செலுத்துவதற்காக  தனியார் மழலையர் பள்ளி முன்பு குப்பைத் தொட்டியை வைத்தது. 

இராஜபாளையம் நகராட்சியின் இச்செயலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டித்துள்ளதோடு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதேநேரத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தமிழகம் முழுவதும் தொழில் நசிவை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சமயத்தில் ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம், கெடி பிடியாக வசூலை நடத்தி வருகிறது. எனவே, தமிழக அரசு, இப்பிரச்சனையில் உரிய தலையீடு செய்வதோடு, பொது மக்கள் தங்களது சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த இரண்டு மாத கால அவகாசம் தர வேண்டும்.  மேலும், நகராட்சி  நிர்வாகம் சீராக இயங்கிட கூடுதலான நிதியை மாநில நிதி ஆணையம் மூலம் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.