சென்னை,செப்.27- சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சரை பார்க்க துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகியிடம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். முன்னதாக, அவரை வழியனுப்ப அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர். விமான நிலைய அதிகாரிகள் வழக்கம்போல் அனைவரையும் சோதனையிட்டனர். இதில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் என்பவரை சோதனை யிட்டபோது, அவர் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் எஸ்-3 மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது துப்பாக்கி வைத்துக் கொள்ள தமக்கு உரிமமும், துப்பாக்கி பயன்பாட்டிற்கு உரிய ஆவணங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ஆவணங்கள் எதையும் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.