tamilnadu

img

‘இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் பண்பாடு’

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோவையில் கடையடைப்பு

கோயம்புத்தூர், டிச.20–  “இந்தியா எங்கள் தாய் நாடு,  இஸ்லாம் எங்கள் பண்பாடு; இந்து -  முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே ” என்ற முழக்கத்தை முன்வைத்தும், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் கோவையில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு மற்றும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.   இப்போராட்டத்திற்கு ஆதரவாக கோவை கோட்டை மேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், உக்கடம், டவுன்ஹால், போத்தனூர் உள்ளிட்ட கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றினர்.  இதேபோல் சிறு வணிக நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்கள் என கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இந்து, முஸ்லிம் வேறுபாடின்றி அடைக்கப்பட்டு தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். கடையடைப்பு போராட்ட அறிவிப்பையடுத்து கோவையில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், ஆத்துப்பாலத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர்  இப்போராட்டத்தில், பங்கேற்று இந்தியா எங்கள் தாய் நாடு, இஸ்லாம் எங்கள் பண்பாடு, இந்து, முஸ்லிம் ஒற்றுமையை மத்திய அரசே சீர்குலைக்காதே என்பது உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.