மராட்டிய மாநிலத்தில் பால்கார் (Palghar) மாவட்டத்தில் உள்ள ஜவஹர் வட்டத்தில் மக்கள் அதிக அளவில் இடம் பெயர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். பெருவாரியான மக்கள் தொடர்ச்சியாக மழை இல்லாத காரணத்தால் வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் பெரு நகரங்களை நோக்கி செல்லத் துவங்கினர்.இத்தகைய நடைமுறை சூழலில் தங்கள் பகுதியில் இருந்த பிரகதி பிரதிஸ்தான் (Pragati Pratishthan) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், அமெரிக்காவின் வங்கியான மெர்ரில் லிண்ச் (Merrill lynch) ஆகியவை இணைந்து புதிய தொழில்நுட்ப முயற்சிகளை விவசாயிகளுக்கு வழங்க முன்வந்தன.
விவசாயிகளுக்கு சூரிய ஒளி வாயிலாக இயங்கும் பம்புகளை வழங்கி நீர்நிலைகளில் தண்ணீர் சேகரிக்க உதவினர். இது கிராமப்புற பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.மேலும் சொட்டு நீர் வாயிலாக விவசாய நிலங்களில் நீர் பாசனம் செய்யவும் உதவினர். இதனால் விவசாயிகள் நெல் மற்றும் மணிலா சாகுபடியில் ஈடுபட முடிந்தது.முன்பு 10 விவசாய குழுக்கள் இணைந்து 57.6 ஏக்கர் நிலங்களில் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது 90 ஏக்கர் அளவில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வருடத்திற்கு 8 மாதங்கள் நிலத்தில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை தேடி பெருநகரங்களை நோக்கி இடம் பெயர்வது வெகுவாக குறைந்துவிட்டது.
தற்போது வங்கிகளும் பல சூரிய ஒளி பாசன திட்டங்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. சுமார் 49 சிறிய அளவிலான சூரிய ஒளி திட்டங்கள் வாயிலாக 311.8 கிலோ வாட் மின்சாரம் உருவாக்கப்பட்டு 1420 வீடுகள், 38 பொது நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது விவசாய குழுக்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள தொழிற்சாலையுடன் ஒப்பந்த அளவில் மணிலா சாகுபடி செய்து வருகின்றனர். வெகுவிரைவில் கிராம அளவில் எண்ணெய் மதிப்பு கூட்டும் நிறுவனம் திறக்கவும் இந்த திட்டத்திற்கான நிதி, அளவு பற்றிய ஆக்கப்பூர்வமான வேளாண் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தகைய சூரிய ஒளி சார்ந்த வேளாண் திட்டங்களை தமிழக கிராமங்களில் நாம் செயல்படுத்தினால் தமிழகத்திலும் தொடர் வறட்சியால் விவசாயிகள் பெருநகரங்களை நோக்கி இடம் பெயர்வது தவிர்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர்: முனைவர் தி.ராஜ்பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத் துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்