tamilnadu

img

நிலக்கோட்டையில் பூ ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டன 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

சின்னாளபட்டி, மார்ச் 19- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மல்லிகை, ரோஜா, கனகாம்பரம் உள்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அனைத்து பூக்களும் நிலக்கோட்டை பூ மார்க்கெட் கொண்டு வரப்பட்டு சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சத்தால் விமானச் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள 40 பூ ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டன. அங்கு வேலை பார்த்த ஐந்தாயிரம் பூக்கட்டும் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். 

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ வாங்க ஆளின்றி வெறிச்சோடி கிடக்கிறது. பல விவசாயிகள் பூக்களை பறிக்காமலே விட்டுவிட்டனர். சில விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து நிலக்கோட்டையில் உள்ள தனியார் செண்ட் கம்பெனியில் அடிமாட்டு விலைக்கு விற்றுச் செல்கின்றனர்.   கொரோனா வைரஸால்  தொழிலின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற அவசரநிலைக் காலங்களில் பூக்களை வைத்து விற்க  நிலக்கோட்டை பகுதியில் அரசு குளிர்சாதன கிட்டங்கி கொண்டு வரவேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.