கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் முத்தமிழ் முதல்வன். கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி தினமலரின் சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய பதிப்புகளில் பக்கம் எண் 8-ல் ‘டீக்கடை பெஞ்ச்’ என்கிற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரம் ஆகியிருந்தது. அதில் அன்றைய கிருஷ்ணகிரி தாலுகா ஆய்வாளர் முத்தமிழ் முதல்வன் குறித்து கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆய்வாளர் முத்தமிழ் முதல்வன் மறுத்து, தினமலர் நாளிதழ் நிர்வாகிகள் வேங்கடபதி, லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்தார். இதையடுத்து வேங்கட பதி இந்த செய்தி எனக்கு தெரியாமல் வெளியாகி விட்டது என வருத்தம் தெரிவித்தார். ஆனால் லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் வழக்கறிஞர் நோட்டீசிற்கு பதில் அனுப்பவில்லை.
இதையடுத்து அவர்கள் மீது ஆய்வாளர் முத்தமிழ் முதல்வன் அவதூறு செய்தி வெளியிட்டதாக வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு கிருஷ்ணகிரி நீதித்துறை நடுவர் எண் 1-ல் நடந்து வந்தது. இவ்வழக்கில் லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தாங்கள் கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் விலக்கு அளிக்க கேட்டு மனு கொடுத்தனர். இதை விசாரித்த 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளித்தும், அதே நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பின் போது 2 பேரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இவ் வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு கூறிய தினத்தன்று லட்சுமிபதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காக தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை யும், தலா ரூ.5 லட்சம் நட்ட ஈடாக அப்போதைய காவல் ஆய்வாளரும், ஓய்வுபெற்ற டிஎஸ்பியுமான முத்தமிழ் முதல்வனுக்கு வழங்க வேண்டும் என நீதித்துறை நடுவர் சுல்தான்ஆர்வின் உத்தரவிட்டார்.