கள்ளக்குறிச்சி. ஏப், 25 - கிராம ஊராட்சிகளில் கிருமிநாசினி உள்ளிட்ட தூய்மைப் பணிபுரியும் கடைநிலை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தரமான கருவிகள் தரப்படாததால் பலவகைகளில் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் அத்தொழிலாளர்கள் பணிபுரியும் நிலை உள்ளது.
கொரானா நோய்த்தொற்றை தடுத்திட கிராம ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கு ஊராட்சி ஒன்றியங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இவற்றினை நடைமுறைப்படுத்திட தேவையான இயந்திரங்கள் அந்தந்தப் பகுதிகளில் வாடகைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரிகளால் வாய்மொழி உத்தரவு இடப்படுகிறது. இதன் விளைவாக கிருமிநாசினி மருந்தினை தேவையான விகிதத்தில் கலந்து வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து ஊராட்சி தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு தேவையான பாதுகாப்பு உடை, கையுறை, முககவசம் போன்ற உபகரணங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு எங்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள லா.கூடலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் செந்தில். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த செந்தில் சில தினங்களுக்கு முன்பு லா.கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பழுதான அந்த இயந்திரத்திலிருந்து கிருமிநாசினி செந்திலின் உடலில் பட்டு பரவியுள்ளது. உடனடியாக தனக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்யுமாறு ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது அவர் இந்த மருந்தால் ஏதும் ஆபத்து இல்லை என்று கூறி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.
இதனால் பணம் இல்லாத சூழலில் சிகிச்சை செய்ய இயலாமல் செந்தில் இருந்துள்ளார். தொடர்ந்து சில தினங்களில் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னும் நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தற்போது தன்னுடைய உடல் நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் மேற்படி தூய்மைப் பணியாளர் செந்தில் உள்ளார். இதேபோல அங்கு பணிபுரியும் ஏழுமலை என்ற தூய்மைப் பணியாளருக்கும் சில தினங்களுக்கு முன்பு காயம் ஏற்பட்டு வடுக்களுடன் உள்ளார்.
கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் அளிக்காமல் கட்டாயப்படுத்தி பணிபுரியச் சொல்லும் நிலை பல்வேறு ஊராட்சிகளில் நிலவுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான பல்வேறு நடவடிக்கைகளால் அடித்தட்டு ஊழியர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதுபோன்று பாதிப்புக்குள்ளாகும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சிகிச்சை அளிப்பதோடு உரிய நிவாரணமும் அளித்து பாதுகாப்பு உபகரணங்கள் தரமானதாக அளிக்க வேண்டும் என்பது முக்கியம்.