இராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலை வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை என்று மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் நகரைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (20). இவர்கள் கடந்த திங்கட்கிழமை மாலை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது அரிவாள், கத்தியுடன் அங்கு வந்த 12 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கியது. இந்த தாக்குதலில் அருண் பிரகாஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். யோகேஸ்வரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தும் முன் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த சேட் என்ற லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மத வெறியர்களால் வெட்டிக்கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தனது சுட்டுரை யில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாஜகவின் ஐடி விங் மதவெறியை தூண்டும் வகையில் இராமநாதபுர கொலை என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் அருண்பிரகாஷ் கொலையின் பின்னணியில் கஞ்சா விற்பது தொடர்பாக தகராறு இருந்ததாகவும் அதேபோல் பெண்கள் தொடர்பான தகராறு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
இந்நிலையில் வசந்தம் நகரில் 31.8.2020ம் தேதி நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கிடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம் இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை.வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு . 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்று இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.