tamilnadu

img

உலக புத்தக தினம் புத்தகங்களை வாங்குவோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து


உலக புத்தக தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

உலகின் பல நாடுகளையும் சேர்ந்த எழுத்துலகப் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தக அன்பர்கள், ஆவணத் தொகுப்பாளர்கள், நூலகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரது மாநாடு 1971  அக்டோபர் 22 அன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகரமான பிரஸ்ஸல்சில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் 1972ம் ஆண்டை உலகப் புத்தக ஆண்டாகக் 

கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. 

சமூகத்தில் நீடித்து வரும் பிற்போக்கு சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், சாதிய பிடிமானம் ஆகியவைக்கு மாற்றான மனித நேய சிந்தனை வளர புத்தக வாசிப்பே சிறந்த வழியாகும்.

மத தீவிரவாதம், சாதிய அணி திரட்டல்கள்அதிகரித்து வரும் இன்றைய சூழலில் வாசிப்பு இயக்கத்தை பலப்படுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும்.

பொருளாதார ஆதிக்கத்தை உலகம் முழுவதும் விஸ்தரிக்க பல வடிவங்களில் முயற்சிகள் மேற்கொள்ளும் இன்றைய சூழலில் நமது பண்பாட்டை, சுயசார்பை, தேச நலனை, மக்கள் நலனை காத்திட மற்றும் சமூக கொடுமைகளைஅகற்றிட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கிட வாசிப்பை உற்சாகப்படுத்தும் நாளாக ஏப்ரல் 23 புத்தக தினத்தை 

பயன்படுத்துவோம். இத்தகைய உலக புத்தகத் தினத்தையொட்டி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு வாசிக்கும் வாய்ப்பை அளித்திட மாநில அரசு தரமான, தேவையான நூல்களை பாகுபாடின்றி பதிப்பகங்களிலிருந்து வாங்கி நூலகங்களுக்குஅளித்திடும் கொள்கையை கடைபிடிப்பது நன்மை பயக்கும். தமிழகத்தில் நூலகங்கள் இல்லாத ஊரே இல்லை எனும் நிலை உருவாக்கப்பட வேண்டும். நூல்கள் மற்றும் பத்திரிகைகள் வாங்குவதற்கு உரிய நிதி ஒதுக்கப்படவேண்டும். தற்போதுள்ள நூலகங்களை கணினி வசதியுடனும், நல்ல கட்டிட வசதியுடனும் 

மேம்படுத்திட வேண்டும்.புத்தக வாசிப்பும், புத்தகப் பரிசளிப்பும் ஒரு ஆரோக்கியமான பண்பாடாக மேலோங்கிட வேண்டும்;  வீட்டு விழாக்கள் உள்பட அனைத்து விழாக்களிலும் புத்தகங்கள் பரிசளிப்பது ஒரு வழக்கமாக மாற்றப்பட வேண்டும்.

வாசிப்பை வாழ்க்கையின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக மேற்கொள்வோம். அனைவருக்கும் படிப்பு என்பது மறுக்கப்பட்ட சூழலில் இன்றைக்கு அறிவை அனைவருக்கும் பொதுவில் வைக்க வாசிப்பும் கூட ஒரு ஆயுதம் என்பதை  நினைவில் நிறுத்துவோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் உலகப் புத்தக தின வாழ்த்துகளை தமிழ் கூறு நல்லுலகிற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.


;