பாகிஸ்தானின் லாகூரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரின் வடமேற்கு பகுதியை மையமாகக் கொண்டு இன்று மாலை 4.33 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு 6.3 ஆக பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது. இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வால் ஏற்பட்ட பொருள்சேதம், உயிர் சேதம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
அதேபோல், இந்த நில அதிர்வின் தாக்கம் தலைநகர் தில்லியில் நாடாளுமன்றம், பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. தில்லியில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். சண்டிகர், நொய்டா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.