370வது பிரிவு, காஷ்மீர் விவகாரம், அதில் அரசின் செயல்பாடுகளை பற்றி பேசினால், விமர்சித்தாலே தேச துரோகி என்கிறார்கள். அரசின் நடவடிக்கைகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறுவதும் ஜனநாயகம்தான். அப்படியில்லை என்றால் இங்கு கூடியுள்ள அனைவரும் தேசத் துரோகிகள்தான். காஷ்மீரில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, ஒருவரு டன் ஒருவர் பேசிக்கொள்ள முடியாதபடி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். உறவினர் சாவுக்கு கூட ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் செல்ல முடியாது. மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதுதான் அங்குள்ள எதார்த்தம்.
காஷ்மீருக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை ரத்து செய்யும் பொருட்டு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் பிரிவு 368ல் கூறியுள்ளபடி, இரு அவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். 3ல் 2 பங்கு ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் திருத்த முடியும். அரசியலமைப்புச் சட்டத்தில் புரியாத பகுதியை விளக்குவதற்காக பிரிவு 367 உள்ளது. அதன்படி ‘ஜெனரல் கிளாசஸ் ஆக்ட்’ உள்ளது. அதில் கூறியுள்ளவைதான் இறுதியானது. பாஜக அரசு இந்த 367வது பிரிவை (ஜெனரல் கிளாசஸ் ஆக்டை) திருத்தியுள்ளது. அதாவது 370வது பிரிவில் உள்ள கான்ட்டிடியுன்ட் அசெம்பிளி (அரசியல் நிர்ணய சபை) என்பதை லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி (சட்டமன்றம்) என்று மாற்றி விட்டார்கள். விளக்கும் சட்டத்தை மாற்றிவிட்டு, 370வது பிரிவை நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். எந்தவொரு பிரச்சனையிலும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம், ஊர் தலையாரி சொல்வதுதான் சட்டம் என்றால் ஒப்புக் கொள்ள முடியுமா? அதுபோன்றதுதான் 367வது பிரிவு திருத்தம்.
சட்டசபையில் மக்கள் பிரதிநிதிகள் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் மக்கள் அதிகாரம் அளிக்கிறார்கள். அவர்கள்தான் சட்டம் கொண்டு வர முடியும். எளிமையாக சொல்வதென்றால், பாஜக அரசு 367வது பிரிவை தளர்த்தி நீதி பதிக்கு பதிலாக தலையாரி முடிவெடுக்கலாம் என்று கூறுகிறது. ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றம் கடந்தாண்டு கலைக்கப் பட்டு ஆளுநர் ஆட்சி நடக்கிறது. குடியரசு தலைவரின் பிரதி நிதிதான் ஆளுநர். சட்டமன்ற ஒப்புதல் தேவையில்லை, என்னுடைய பரிந்துரையே போதும் என்கிறார் ஆளுநர். இது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவு. இதைவிட கீழ்த்தரமான முடிவை பார்க்க முடியாது. ஜம்மு-காஷ்மீரில் இது குறித்து கேள்வி எழுப்பினால் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளுகிறார்கள். ஆக.5 அன்று தான் குடியரசுத் தலைவர் உத்தரவு வருகிறது. ஆனால் ஆகஸ்ட் 4 அன்றே ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற இணையதளத்தில், அடுத்தடுத்த நாட்களில் நடக்க உள்ள பலவிதமான சந்திப்புகள், தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் போன்றவற்றை ரத்து செய்து நிர்வாக உத்தரவிட்டுள்ளனர். ஆக.4ந் தேதி ஞாயிற்றுகிழமை விடுமுறைநாள். அன்றைய தினம் நீதிமன்றம் செயல்படுமா? அப்படி இருந்தும் இணை யதளத்தில் அறிவிப்புகளை போடுகிறார்கள், நோட்டீஸ் போர்டில் ஒட்டுகிறார்கள். மிகப்பெரிய சூழ்ச்சி செய்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
5ந் தேதி காஷ்மீர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன், மாவட்ட பார் அசோ சியேஷன் நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்துவிட்டார் கள். மூத்த தலைவர்கள் அனைவரையும் கைது செய்துவிட்ட னர். 4ஆயிரம் பேரில் பாதிபேர் ஜம்மு-காஷ்மீரிலும், பாதி பேரை உ.பி., ஆக்ரா போன்ற இடங்களில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைத்துவிட்டனர். இந்தச்சட்டத்தின் கீழ் கைது செய்தால் 3 மாதம் வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையில்லை. யாருக்கும் தகவல் சொல்லத் தேவை யில்லை. 8-10 வயதுள்ள குழந்தைகளைக் கூட இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.
குழந்தைகள் காணவில்லை என்றால் காவல்நிலை யத்தில் புகார் செய்யலாம். காவல்துறையும், ராணுவமும் குழந்தையை தூக்கிச் சென்றால் எங்கு சென்று புகார் செய்வது? நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் இல்லை. எனவேதான் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் உச்சநீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். சாதாரண மாக இதுபோன்ற மனு தாக்கல் செய்தால், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால் யெச்சூரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீங்கள் ஜம்மு-காஷ்மீருக்கு நேரில் சென்று பார்த்துவிட்டு வந்து எங்களுக்கு அறிக்கை கொடுங்கள் என்கிறது. அரசுதானே அறிக்கை தர வேண்டும்?
1975ல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். பல உயர்நீதிமன்றங்கள் கைது செல்லாது என்று உத்தரவிட்டன. மத்தியப் பிரதேச ஜபல்பூர் உயர்நீதிமன்றம், ஒருவரை கைது செய்தது செல்லாது என்று அறிவித்து, அந்த கைதுக்கு உத்தரவு பிறப்பித்த கூடுதல் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், மத்திய அரசு மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு வரும் உரிமையும், வாழ்வுரிமையும் கூட ரத்து செய்யப்பட்டுள்ளது என்றது. அப்போது அத்வானி தரப்பில், ஆள்மாற்றி கைது செய்தா லும் நீதிமன்றம் வர முடியாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு உச்சநீதிமன்றம், வர முடியாது; கேள்வி கேட்கக் கூடாது என்று கூறியது. நீதித்துறை வரலாற்றில் மிக மோசமான தீர்ப்பு ஏடிஎம் ஜபல்பூர் தீர்ப்புதான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி களே பின்னாளில் ஒப்புக் கொண்டனர். அண்மையில் கூட ஒரு நீதிபதி, அந்த தீர்ப்பு 10 மைல் ஆழத்தில் புதைக்க வேண்டிய மட்டமான தீர்ப்பு என்று கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, அவசரநிலை பிரகடனமா உள்ளது? அடிப்படை உரிமைகள் இருக்கிறது அல்லவா? நமக்கு உள்ள உரிமை காஷ்மீர் மக்களுக்கு இல்லையா? அவர்கள் வழக்கு தொடுத்தால் ஏன் நீதிபதிகள் அரசைப் பார்த்து கேள்வி கேட்க பயப்படுகிறார்கள்? மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலைப் பிரகடனம் செயல்படுத்தப்படுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எனவேதான், உச்சநீதிமன்றத்தில் யெச்சூரி போன்றோர் வழக்கு தாக்கல் செய்தால், அரசு தரப்பில் வாய் மொழியாக பதில் தருகிறோம்; அரசிடம் எழுத்துப்பூர்வமாக கேட்காதீர்கள்; வெளிநாடுகளில் இந்தியாவிற்கு கெட்ட பெயர் வரும் என்று பம்முகிறார்கள்.
ஆகவே, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயக உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. ஜனநா யகத்தையே சீர்குலைத்திருக்கிறார்கள். அதுபோன்ற நட வடிக்கை தமிழகத்தில் நடக்காது என்று சொல்ல முடியுமா? அதேபோன்ற தலையாரி உத்தரவை தமிழ்நாட்டில் பிறப்பிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அதிமுக அரசு பாஜகவுக்கு ஜால்ரா போடுகிறார்கள். 2021க்கு பிறகு தமிழகத்தில் தேர்தல் கிடையாது. குடியரசுத் தலைவர் ஆட்சிதான் நடக்கும் என்று தலையாரி உத்தரவு போட்டால் எங்க போய் கேட்பது? உச்சநீதிமன்றம் தலையிடுமா? தலையிட தயாராக இருக்கிறதா? ஆழ்ந்து கவலைப்படக்கூடிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று(செப்.26) நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை பேசியதிலிருந்து...
தொகுப்பு : செ.கவாஸ்கர்