tamilnadu

img

தாகூரின் சீற்றமும் மனித உரிமை விழிப்பும் -சு.பொ.அகத்தியலிங்கம்

“மக்களின் கருத்துகளை லேசாக ஒதுக்கிவிட்டு அடக்குமுறையை ஆட்சியாளர் ஏவிவிடுவது கண்டு நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். பிரிட்டிஷ் ஆட்சி வேகமாக மதிப்பிழந்து வருகிறது. ஆகவேதான் கொடூர அடக்குமுறை மூலம் தன்னைக் காத்துக் கொள்ள முனைகிறது. நான் எனது நாட்டு மக்கள் சார்பாக எச்சரிக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சி எவ்வளவு அதிகார பலம் பெற்றிருந்தாலும் – சுய மதிப்பை அடக்குமுறை மூலம் குலைத்துக் கொண்டீர்கள்.அதுவே உங்களுக்கு மிகப்பெரிய பலவீனம் ஆகும்.நடந்தவைகளை மறைக்காதீர்கள். உண்மைகளை ஒத்துக் கொள்ளுங்கள். உலகில் மக்கள் மனதில் படிந்துவிட்ட காயங்களைத் தழும்புகளை ஆற்ற உலகில் எந்த சக்தியாலும், அடக்குமுறையாலும் முடியாது. இதை உணராமல் இருட்டிலே இருக்காதீர்கள்.” இப்படிக் குமுறிக் குமுறி அறிக்கைவிட்டவர் இளைஞர் அல்ல. எழுபது அகவையைத் தொட்டுவிட்ட கவியரசர் இரவீந்திரநாத் தாகூர். சிறை எப்போதும் ஆட்சியாளர் சித்திரவதை முகாம்தான். அதுவும் அந்நிய ஆட்சி எனில் கேட்கவா வேண்டும்? பிரிட்டிஷ் ஆட்சியில் சிறைக் கொடுமை அதிகம். அந்தமான் சிறை கொடூரத்தின் உச்சம். ஒவ்வொரு சிறையும் அப்படித்தான். மேற்குவங்கம் ஹிஜிலி சிறை விதி விலக்காகவா இருக்கும்? அங்கே சிறை அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனைக் கைதிகளுக்கும் அடிக்கடி மோதல் நடக்கும். குறைந்தபட்ச தேவையைகூட பூர்த்தி செய்யாத சிறை நிர்வாகம்; மனித உயிராகக் கூட கைதிகளை மதிக்காமல் புழுக்களாய் மிதித்தது. சிறைவாசிகள் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தனர். அங்கு கம்யூனிஸ்டுகளும் வந்து சேர்ந்தனர். கொதிநிலை அதிகரித்தது.போராட்டம் வெடித்தது. 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் இரவு 9 மணிக்கு ஆயுதம் தாங்கிய ராணுவ சிப்பாய் ஐம்பது பேர் சிறைக்குள் நுழைந்தனர். நரவேட்டை ஆரம்பமானது. நிராயுதபாணியாய் இருந்த சிறைவாசிகள் அடித்து துவைக்கப்பட்டனர். மார்க்சியத்தை நோக்கி பயணப்பட்ட கொல்கத்தாவைச் சார்ந்த சந்தோஷ்குமார், பாரிசாலைச் சார்ந்த தாரகேஷ்வர் சென் இருவரும் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சனியனுக்கு பலியாயினர். பலநூறு பேர் காய மடைந்தனர். இதனைக் கேள்விப்பட்டதும் குமுறி எழுந்த இரவிந்திரநாத் தாகூர் கூறியவையே முதலில் குறிப்பிட்ட வரிகள். பிரிட்டிஷ் அரசால் பூசி மெழுக முடியவில்லை, ஓர் கண் துடைப்பு விசாரணைக் கமிஷனை நியமித்தது. அக்கமிஷனும் மூடி மறைக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் துப்பாக்கிச் சூடும் தாக்குதலும் தவறென ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனித உரிமை குறித்து உலகெங்கும் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வின் ஒரு கூறாக இங்கும் அது பற்றிய பிரக்ஞை அதிகரித்ததாக நேரு குறிப்பிடுகிறார்.  இந்தியா முழுவதும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, எதிர்த்து போராடும் உரிமை, சிறையில் மனிதராக நடத்தப்படும் உரிமை, அடக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு இவற்றுக்காக நேரு போன்றோர் எழுதியும் பேசியும் எடுத்த முயற்சியின் விளைவாக 1936 ஜூலையில் பம்பாயில்  சிவில் லிபர்ட்டி கழகம் – குடிமை உரிமைக் கழகம் தோற்றம் பெற்றது. கவியரசர் இரவீந்திரநாத் அதன் கவுரவத் தலைவராகவும், கவிக்குயில் சரோஜினி நாயுடு அதன் செயல் தலைவராகவும் பொருத்தமாகத் தேர்வாயினர். கல்கத்தா, சென்னை எங்கும் அதன் கிளை பரவலாயிற்று. ஹீமன் ரைட்ஸ், ‘மனித உரிமை’ என பெயர் மாற்றம் பெற்றது விடுதலைக்குப் பிறகே. சாதிய ஒடுக்குமுறையும் சமூக ஒடுக்குமுறையும் உச்சத்திலிருந்த இந்தியாவில் அதற்கு  எதிரான போராட்டமும் மனித உரிமையின் முக்கியக்கூறே! சங்கம் சேரும் உரிமை, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக கம்யூனிஸ்டுகள் நாடு முழுவதும் தன்னலமின்றி போராடி வந்தனர். விடுதலைப் போராட்ட காலத்தில் சிறைச் சித்திரவதைகளை கடுமையாக எதிர்கொண்டவர் கம்யூனிஸ்ட்டுகள் என்பது மட்டுமல்ல.விடுதலைக்குப் பிறகும் அதே நிலைதான். மனித உரிமை முழக்கமிட்ட நேரு பிரதமராய் பொறுப்பேற்ற பின்னும் இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அடக்குமுறையை எதிர்கொண்டே இயங்க வேண்டியிருந்தது. 1950ல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட்டுகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்து தியாகிகளானதும், கடலூர் சிறைத் தியாகிகள் நால்வரும் மனித உரிமைப் போர் தொடர்வதின் சாட்சிகளாயினர். இப்போதும் தொடர்கிறது அடக்குமுறையும் எதிர்ப்புப் போராட்டமும்.