tamilnadu

img

கட்டாயத் தேர்ச்சி – கருணையல்ல! கல்விக் கடமை!! - சு.மூர்த்தி

நமது அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி உரிமைச் சட்டம் 2010 ஏப்ரல் முதல் நாளில் நடைமுறைக்கு வந்தது. சட்டம் நடைமுறைக்கு வந்து 10 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், சட்டத்தில் உறுதிய ளிக்கப்பட்ட அரசின் கடமைகளை கைகழுவும் வகையில் மூன்று முறை சட்டத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. காலம் தாழ்ந்து, சில ஓட்டைகளோடு உருவாக்கப்பட்ட கல்வி உரிமைச் சட்டமும் தற்போது குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற கதியில் உள்ளது. 

மூன்று திருத்தங்கள் 

சட்டம் நடைமுறைக்கு வந்த 6 மாதங்களில் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி அனைத்துப் பள்ளி களிலும் ஆசிரியர் - மாணவர் விகிதம் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்ற விதி, சட்டம் நடைமுறைக்கு வந்த 3 ஆண்டுகளில் என்று 2012 இல் திருத்தம் செய்யப்பட்டது. சட்டம் நடைமுறைக்கு வந்த 5 ஆண்டுகளுக் குள் அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று விதி, 2017 இல் திருத்தம் செய்யப்பட்டு, மேலும் 4 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டுச் சட்டத் திருத்தம் மூலம், எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கவேண்டும் என்ற உறுதிமொழி யும் ஒழிக்கப்பட்டுள்ளது.  மேற்கூறப்பட்ட மூன்று சட்டத் திருத்தங்களும் கல்வி உரிமைச் சட்டத்தை கல்வி மறுப்புச் சட்டமாக மாற்றியுள்ளன. 

கல்வி உரிமைச் சட்டம் மூலம் வரையறை செய்யப்பட்ட கால அளவிற்குள் அரசுப் பள்ளி களில் போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்க ளை மத்திய மாநில அரசுகள் நியமித்திருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தரமான, சம மான கல்வி கிடைப்பதற்கான உறுதிமொழி களை நிறைவேற்றாமல், சட்டத்திருத்தம் செய்து காலநீட்டிப்பு செய்தது நியாயமற்றது.  ஆசிரி யர் நியமனம் சார்ந்த அரசின் சட்டப்பூர்வக் கட மைகளைக் கைகழுவியதோடு மட்டுமல்லா மல், கடந்த ஒன்பதாண்டுகளாக நடைமுறை யில் இருந்த  எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதையும் ஒழித்திருப்பதன் மூலம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி உரிமை கானல் நீராகிவிட்டது.   

கல்வி உரிமைக்கு  கல்லறை கட்டுவது

இந்தியா குழந்தைகளின் நாடு. மக்கள் தொகையினரில் நான்கில் ஒரு பகுதியினர் குழந்தைகள். ஆனால், இந்தியக் குழந்தைக ளில் சரிபாதியினர் கல்வி கற்க இயலாத சூழலில் பிறந்து வளர்கிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டே எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி மூலம் அனைத்துக் குழந்தைகளும் இடைநிற்றலின்றி, மன அழுத்தமின்றி கல்வி கற்க  கல்வி உரிமைச் சட்டம் வழி வகை செய்தது. எனவே கட்டாயத் தேர்ச்சி என்பது கருணையோ சலுகையோ அல்ல. இதனால், கல்வித் தரம் கெடுகிறது என்று சட்ட திருத்தம் செய்தது நியா யமும் அல்ல. மத்திய சட்ட அமைச்சகமும் நாடா ளுமன்றமும் குழந்தைகளின் கல்விக்கான உரிமையைப் பாதுகாக்கும் அக்கறையோடும் குழந்தை நேய அணுகுதலோடும் செயல்படத் தவறியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த வரைவு மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அப்போ தைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  ‘‘போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம்.” என்று பதிலளித்துள்ளார். கல்வி யைச் சந்தைப் பொருளாக்குவதும் போட்டிப் பொருளாக்குவதும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற அடிப்படை உரிமைகளுக்குக் கல்லறை கட்டும் கொள்கையாகும். இது அரசி யல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாக உள்ள சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றிற்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையல்ல. நாட்டின் விடுதலைக் காகப் போராடி உயிர்நீத்த மாமனிதர்களின் உயிர்மூச்சு என்பதை அதிகாரத்தில் உள்ள வர்கள் எண்ணிப் பார்த்திருக்கவேண்டும்.   

மத்திய அரசால் கட்டாயத் தேர்ச்சி ஒழிப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், நடப்புக் கல்வியாண்டிலேயே தமிழ்நாட்டில் 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பு களைத் தெரிவித்துவரும் நிலையிலும் அதற்கான பணிகளைப் பள்ளிக் கல்வித் துறை வேகமாகச் செய்துகொண்டுள்ளது. 

தவறானது! முரணானது

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கும் முன், கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் கூறப்பட்டுள்ள அனைத்து விதி களையும் ஆராய்ந்திருக்கவேண்டும்.  பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால், மூன்று ஆண்டு களுக்கு எந்தக் குழந்தையும் அதே வகுப்பில் நிறுத்தம் செய்யப்படமாட்டார்கள் என்று அறி வித்திருப்பதும் தவறானது. தமிழக அரசின் 5, 8 வகுப்புப் பொதுத் தேர்வு அரசாணை, தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை எந்தவொரு குழந்தையும் எந்த வாரியத் தேர்விலும் (Board Examination) தேர்ச்சி பெறத் தேவையில்லை என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் விதி 30 க்கு முரணானது.  உரிய அரசாங்கம் தொடக்கக் கல்விக்கான பாடத்திட்டத்தையும் தேர்வு  நடைமுறைகளை யும் வகுக்கும் போது, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தின் விதி 29 தெளிவாக வலி யுறுத்துகிறது: 

(அ) அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்பீடுகளுடன் இணக்கம்; (ஆ) குழந்தைக ளின் ஒட்டுமொத்த வளர்ச்சி; (இ) குழந்தையின் அறிவு, ஆற்றல் மற்றும் திறமையை உருவாக்கு தல்; (ஈ) குழந்தைகளின் உடல் மற்றும் மனத் திறன்களை முழுமையாக வளர்ப்பது; (உ) செயல்பாடுகள், கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு  மூலம் குழந்தை நேயம் மற்றும் குழந்தை மைய மான கற்றல்; (ஊ) குழந்தைகளை பயம், அதிர்ச்சி மற்றும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து விடுவித்தல் மற்றும் கருத்துக்களை சுதந்திர மாக வெளிப்படுத்த குழந்தைகளுக்கு உதவு தல்; (எ) குழந்தையின் அறிவைப் புரிந்து கொள்வது மற்றும் அதைப் பயன்படுத்துவதற் கான குழந்தைகளின் திறனை அளவிட விரி வான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு  மாநில அளவிலான பொதுத் தேர்வு என்பது மேற்கண்ட கல்வி உரிமைச் சட்டத்தின் விதி 29 இல் இடம்பெற்றுள்ள மதிப்பீட்டு வழிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. 

பொருத்தமற்றது

கல்வி உரிமச் சட்டம் வயதுக்கு ஏற்ற மற்றும் வகுப்பில் சேர்க்கை (Age Appropriate and Class ), தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation), நிறுத்தம் இல்லாத கொள்கை (No  Detention Policy) ஆகிய மூன்று அடிப்படை யோசனைகளை ஊக்குவிக்கிறது. குழந்தை கள் வெவ்வேறு நுண்ணறிவு நிலைகள், புரிந்து கொள்ளுதல் மற்றும் உள்வாங்கும் ஆற்றல்   நிலைகளைப் பெற்றிருப்பார்கள் என்பதால் குறிப்பிட்ட கேள்விகளைக் கொண்ட 2 மணி நேர அளவிலான ஒரு தேர்வு குழந்தைகளின் கல்வி அடைவை மதிப்பீடு செய்ய முற்றிலும் பொருத்தமற்றது.   பள்ளிப் படிப்பை முடித்த பிறகு உயர்கல்விப் படிப்பில் சேர்வதற்கான அல்லது வேலை வாய்ப்புக்கான தகுதியை அளவிடவே  10 மற்றும் +2 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. கட்டாயத் தேர்ச்சி முறை இல்லாமல் 9 முதல் +2 வகுப்பு வரை படித்தவர்களே பள்ளிப் படிப்புக்கான கல்வியறிவைப் பெறவில்லை என்பதை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் பொறியி யல் பட்டப் படிப்புக்கான தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்கள் காட்டுகின்றன. எனவே, 5, 8 வகுப்புப் பொதுத் தேர்வினால் தொடக்கக் கல்வி யின் தரம் உயரும் என்பது தவறான முடிவு. 

மழலையர் கல்வி

கல்வி உரிமைச் சட்டம் விதி 11, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஆரம்பக் கல்விக்குத் தயார்படுத்துவதற்கும், ஆறு வயது நிறைவடையும் வரை அனைத்து குழந்தைக ளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் பள்ளி முன்பருவக் கல்வியை வழங்கு வதற்குமான ஏற்பாடுகளை உரிய அரசாங்கம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியுள் ளது. எனவே, தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அனைத்துத் தொடக்கப்பள்ளிகளி லும் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இவ்வகுப்புகளுக்கு மழலையர் கல்விப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 

அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் பாடத்திற்கு ஒரு ஆசிரியர், வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கவேண்டும். உடற்கல்வி, கலைக்கல்வி, கணினிக்கல்வி ஆகியவற்றிற்கு சிறப்பாசிரியர்கள் இருக்க வேண்டும். தனித்தனி வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம், சுகாதாரமான கழிவகம், போது மான விளையாட்டிடம் இருக்கவேண்டும். மாதம் ஒரு முறையாவது ஒரு பள்ளியைப் பார்வையிடும் வகையில் குறைந்தது 20 பள்ளிகளுக்கு ஒரு ஆய்வாளர் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமுடைய பள்ளிகள் தமிழ்நாட்டில் 10 சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. 

குழந்தைகள் மீதான வன்கொடுமை

பள்ளிகளின் கட்டமைப்பு நிர்வாகம் மற்றும் கற்பித்தல் சார்ந்த அடிப்படைத் தரங்களை உயர்த்துவதன் மூலமே கல்வித் தரத்தை உயர்த்த முடியும். இதைக் கவனத்தில் கொள்ளாமல் பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் படிக்கும் குழந்தை - படிக்காத குழந்தை; தேர்ச்சி பெற்ற குழந்தை – தேர்ச்சி பெறாத குழந்தை என்பன போன்ற பாகுபாடுகளை உரு வாக்குவது எதிர்க்குரல் எழுப்ப வலிமையற்ற குழந்தைகள் மீதான வன்கொடுமையாகும்.  ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அனை த்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளிலும் 2012 கல்வியாண்டு முதல் கல்வி உரிமைச் சட்ட வழிமுறைகளின்படி முப்பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முப்பருவ மதிப்பெண்களும் கல்வி மேலாண்மை தகவல் முறைமை  (Education Management Information System) மூலம் பதிவு செய்யப் பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்தும் வழி  வகைகள் ஆராயப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. 

கட்டாயத் தேர்ச்சி சட்டத் திருத்தம் விதி 16, கல்வியாண்டின் முடிவில் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் வழக்கமான தேர்வு இருக்க வேண்டும்; தேர்வில் குழந்தை தோல்விய டைந்தால் மீண்டும் கூடுதல் கற்பித்தல் வழங் கப்பட்டு இரண்டு மாதத்திற்குள் மறுதேர்வு எழுத வைக்கவேண்டும்; மறுதேர்வில் தோல்விய டைந்தால், தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை 5, 8 வகுப்புகளில் நிறுத்தம் செய்வதைத் தவிர்க்க உரிய அரசாங்கம் முடிவெடுக்கலாம்.  தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை எந்தக் குழந்தையும் பள்ளியில் இருந்து வெளி யேற்றக் கூடாது  என்பதை வலியுறுத்துகிறது. எனவே, கட்டாயத் தேர்ச்சி திருத்த விதியும் பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்பதை வலி யுறுத்தவில்லை. கட்டாயத் தேர்ச்சிக் கொள் கையை பின்பற்றுவதையும் தொடர்வதையும் மாநில அரசு முடிவு செய்துகொள்ள வாய்ப்ப ளித்துள்ளது. 

மனத்துன்புறுத்தல் கூடாது

 கல்வி உரிமைச் சட்ட விதி 17, எந்தவொரு குழந்தையும் உடல் தண்டனை அல்லது மன துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும் இவ்விதியை மீறுபவர், அவரது பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு பொறுப் பாவார் என்றும் கூறுகிறது. எனவே குழந்தை களை மனத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் பொதுத் தேர்வு முறை கைவிடப்படவேண்டும். 

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 100, நாள் 22-05-2017 இன் படி 2017- 2018 கல்வியாண்டிலிருந்து +1 வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் +1 வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களும் கல்லூரிப் பட்டப் படிப்புச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டி லேயே தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திருத்த அரசாணை எண் 195 நாள் 14-09-2018 இன் படி மாணவர்களின் நலன் கருதி, மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் +2  பொதுத்தேர்வு  மதிப் பெண்களை மட்டும் கல்லூரிப் பட்டப் படிப்புச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  மேலும் மாணவர்களின் தேர்வு மன அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில் பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 118, நாள் 9-06-2018 இன் படி +1 மற்றும் +2 பொதுத் தேர்வில் இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாடத் தேர்வு ஒரே தாளாக மாற்றப்பட்டுள்ளது. இதைப் போலவே 5 மற்றும் 8 வகுப்புக் குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத் தேர்வு அரசாணையை ரத்து செய்யவேண்டும்.




 

;