1948 - அமெரிக்காவில் பெண்களுக்கு வான்படையில் இடமளிப்பதற்காக ‘வான்படையில் பெண்கள்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. 1942இல் உருவாக்கப்பட்ட பெண்கள் துணை ராணுவத்தின் ஊழியர்கள் ஏற்கெனவே வான்படையின் பல பணிகளில் இருந்தாலும், (1907இல் ராணுவத்தின் பிரிவாக உருவாக்கப்பட்டு,) 1947இல்தான் தனிப்டையாக மாற்றப்பட்ட வான்படையில் பெண்களை பணியமர்த்த இடமளிக்கப்படாததால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. பெண் விமானிகளின் முதல் அணி, அமெரிக்க ராணுவத்தின் விமானப் பிரிவின் பயிற்சியை 1943இலேயே வெற்றிகரமாக முடித்திருந்தாலும்கூட, பெண்கள் விமானிகளாக அல்லாமல் மற்ற பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். ஏற்கெனவே உலகப்போர்க் காலத்தில் விமானிகளாகப் பணியாற்றியிருந்த பெண்களைக்கூட, தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் துணைப்படையாகவே வான்படை வைத்துக்கொண்டது. 1976இல் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களையும் வான்படையில் சேர்த்துக்கொள்ளும் முறை தொடங்கியபோது இந்த அமைப்பு கலைக்கப்பட்டது. உலக வரலாற்றின் பெரும்பகுதியில் போர்க்களத்திற்கு வெளியேயிருந்து உதவுபவர்களாகவே பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 18ஆம் நூற்றாண்டுவாக்கில் போர்க்களங்களில் சமையல், சலவை முதலான பணிகளுக்குப் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். முதல் உலகப்போர்க் காலத்தில், களத்தில் மருத்துவ உதவிகள் செய்யவும், வெடிமருந்து உற்பத்தியிலும் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். அப்போதே தாக்குதல் நடத்தும் பெண்கள் படைப்பிரிவை வைத்திருந்த நாடு ரஷ்யாதான். அலெக்சாண்ட்ரா குதாஷேவா தலைமையிலான ரஷ்யப் பெண்கள் அணி புகழ்பெற்றதாகும். ரஷ்யாவில், (புரட்சிக்குமுன்) 1917இல் உருவான தற்காலிக அரசு, ராணுவத்தில் ஏராளமான பெண்கள் அணிகளை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மெனி ஆகிய நாடுகளின் விமான எதிர்ப்புப் படைகளிலேயே பெண்கள் பணிபுரிந்த இரண்டாம் உலகப்போர்தான், போரிலும், ராணுவத்திலும் பெண்கள் பங்கேற்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. இருந்தாலும், இன்றுவரை படைகளில் ஆண்களுக்கு நிகரான நிலை பெண்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் பெண்களையே ராணுவத்தில் அனுமதிக்காத நாடுகளும் உலகில் உள்ளன. மறுபுறம், பொலிவியா, இஸ்ரேல், வடகொரியா, மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்வீடன், துனீஷியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளில், ஆண்களைப்போன்று பெண்களும் ராணுவத்தில் பணியாற்றுவது கட்டாயமாகவும் உள்ளது. இந்நாடுகளிலும்கூட, பெண்கள் பொதுவாக ராணுவப் பணிக்கு வற்புறுத்தப்படுவதில்லை.