ஐ.ஐ.டி குவஹாத்தியில், வெளிநாட்டு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐஐடி வளாகங்களில், தற்கொலை சம்பவங்களில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஐஐடி வளாகங்களில், இதுவரை 52 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. சமீபத்தில், சென்னை ஐஐடி வளாகத்தின் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்திப் எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால், தான் தற்கொலை செய்து கொள்வதாக அம்மாணவி குறிப்பு எழுதி வைத்துள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், ஐஐடி குவஹாத்தியில் வெளிநாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானின் உள்ள கிஃபு பல்கலைக்கழகத்தின் மாணவர் கோட ஒண்டா, உயிர் அறிவியல் மற்றும் உயிர் பொறியியல் துறையில் 3 மாத பயிற்சி வகுப்புக்காக குவஹாத்தியில் உள்ள ஐஐடிக்கு வந்துள்ளார். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவரின் செல்போன், நேற்று மாலை வெகுநேரமாக சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததை அடுத்து, சந்தேகமடைந்த அவருடைய நண்பர்கள் ஐஐடி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து, அவர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அம்மாணவரின் அறையில் தற்கொலை குறிப்பு ஏதும் சிக்கவில்லை என கூறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.