tamilnadu

img

அசாமில் அரசின் வலைபக்கத்தில் என்.ஆர்.சி தரவுகள் மாயம்!

அசாமில் தொழில் நுட்ப கோளாறுகளால் என்ஆர்சி தரவுகள் மாயமாகி உள்ளது அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட  குடிமக்கள் பதிவேட்டின் இறுதி தரவுகள் மாநில இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், என்ஆர்சி தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிளவுடில்  கிடைக்கவில்லை என்று  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
ஐடி நிறுவனமான விப்ரோவுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது தான் தரவுகள் மாயமானதற்கு காரணமாக இருக்கும் என என்ஆர்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
என்ஆர்சி இறுதி பட்டியல் கடந்த 2019 ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட பின்னர், அசாம் என்.ஆர்.சி-யில் இந்திய குடிமக்களை விலக்குவது மற்றும் சேர்ப்பது பற்றிய முழுமையான விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான 'www.nrcassam.nic.in' இல் பதிவேற்றப்பட்டன.
இந்த தரவுகளுக்கான கிளவுட் சேவை விப்ரோவால் வழங்கப்பட்டது. ஆனால் நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 19 வரை இருந்தது. எனினும், இதனை முந்தைய இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பிரதீக் ஹஜேலா புதுப்பிக்கவில்லை.  இதனால் விப்ரோவால் வழங்கப்பட்ட சேவை இடை நிறுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் 15 முதல் தரவு ஆஃப்லைனில் கிடைத்தது. இதையடுத்து, டிச.24ம் தேதி நான் பொறுப்பேற்றேன் என என்ஆர்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம்  தகவல் தெரிவித்துள்ளார். 
மேலும், அவர் கூறும்போது, ஜனவரி 30ம் தேதி நடந்த மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தேவையான நடவடிக்கைகளைச் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் விப்ரோவுக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறினார். "விப்ரோ தரவுகளை மீண்டும் நேரலை செய்தவுடன், அது பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும், அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் மக்கள் இதனை அணுக முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ஹிதேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.