tamilnadu

img

அரசுப் பள்ளி தத்தெடுப்பு குறித்து செங்கோட்டையன் கூற்று

சு.வெங்கடேசன் விமர்சனம்


திருச்சிராப்பள்ளி, ஜூன் 1-அரசுப்பள்ளிகளை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். இது 70 சதவீத தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அடிப் படைக் கல்வி பெறுவதிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாகும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி இந்தியமாணவர் சங்கத்தினர் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சென்னை, கடலூர் ஆகிய மையங்களிலிருந்து மே 25-ஆம் தேதி தமிழகம் தழுவியசைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டனர். 300 பேர் அடங்கிய பயணக்குழுவினர் தங்களது பிரச்சாரத்தை வெள்ளியன்று திருச்சிராப்பள்ளியில் நிறைவு செய்தனர்.இங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மதுரைமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:அரசியலின் விவாதப் பொருளை தீர்மானிப்பவர்கள் மாணவர்கள் தான் என்பதை இந்திய மாணவர் சங்கம் மீண்டும் தீர்மானித்துள்ளது. அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்து சுமார் 1500 கிலோ மீட்டர்சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை இந்திய மாணவர் சங்கம் நடத்தியுள்ளது

கருணையல்ல, அரசின் கடமை

மாணவர்கள் கற்றுக்கொள்பவர்கள் மட்டுமல்ல. கற்றுக்கொண் டதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பவர்கள். அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டுமென நாம் கருணை காட்டக் கோரவில்லை. யாசகம் கேட்கவில்லை. அது அரசின் கடமை. அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டுமென்பது அரசியல் கோரிக்கை. அதை மாணவர் சங்கம் கையிலெடுத்துள்ளது.அரசுப்பள்ளிகளை நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்ளுங்கள் எனதமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். இதன்பொருள் 70 சதவீத தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்கள் அடிப்படைக் கல்வி பெறுவதிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாகும்.மாணவர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சாரத்தில் இஸ்ரோவிற்கு தேர்வுசெய்யப்பட்டவர், ஆய்வு மாணவர், முதுகலை, இளங்கலை மாணவர் தொடங்கி அரசுப்பள்ளியில் 6-ஆம்வகுப்பு முடித்துள்ள மாணவ-மாணவிகள் வரை பங்கேற்றுள்ளனர். இந்த இளம் தலைமுறையால் தான் சமூகத்திற்கு தன்னம்பிக்கையை அளிக்கமுடியும். கல்வியை வியாபாரமயமாக்க, தனியாருக்கு தாரை வார்க்கமத்திய-மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. அதை எதிர்த்து இந்தியமாணவர் சங்கம் களம் புகுந்துள்ளது.

கழுத்தை நெரிக்கும் முயற்சி

தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங் கள் கல்வியில் இன்றைக்கும் பின் தங்கியிருப்பது வருத்தமளிக்கிறது. கல்வியில் முன்னோடி மாவட்டங்களாக இவை விரைவில் திகழ வேண்டும். அரசுப் பள்ளிகளின் கழுத்தை நெரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்கிறது. இதை மாணவர் சமூகம்முறியடிக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் பணிக்குச் சென்ற அரசு ஊழியர்கள் கிராமப்புறங்களில் உள்ள90 சதவீத பள்ளிகளில் குளியலறை,கழிப்பறை வசதியில்லை எனக் கூறியுள்ளனர். கிராமப்புற பள்ளிகளையும், அரசுப் பள்ளிகளையும் மேம் படுத்துவதைப் பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.

நீட் கட்டாயமான பின் அதிகரிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகள்

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் தான் அரசுப்பள்ளி குறித்து மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். கேரள மாநிலத்தில் உள்ளது போல் கல்வி மேலாண்மைக்குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். நீட்தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின்அறிவிப்பால் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலக் கல்வி கேள்விக குறியாகியுள்ளது. நீட் தேர்வு கட்டாயமானதற்குப் பின்னால் தான் தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது அடுத்த தலைமுறையை பாதுகாப்பதாகும்.அரசுப்பள்ளிகளின் கரும் பலகைகளிலிருந்து ஆசிரியர்களின் கைகளையும், கிராமப்புற ஏழை-எளிய மாணவர்களின் கைகளையும் அவ்வளவு எளிதில் எடுத்துவிட முடியாது.தமிழகத்தின் அடிப்படைத் தேவையான கல்வியை முன்னிறுத்தி, கல்வி நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மேற்கொண்டுள்ள சைக்கிள் பிரச்சாரப் பயணம் மட்டுமல்ல, அவர்களதுகோரிக்கைகளும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கை தமிழ்ச் சமூகத்தின் கோரிக்கை. தமிழ்ச் சமூகம் மாணவர் சங்கத்தை கைவிடாது.இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். இடதுசாரி தலைவர்கள் ஸ்ரீதர், ராஜா, வழக்கறிஞர் முத்துக் கிருஷ்ணன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டேரர் கலந்துகொண்டனர்.பயணக்குழுவினரை மதுரை மக்களவை உறுப்பினரும் தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத் தலைவருமான சு.வெங்கடேசன் கௌரவித்தார்.இந்தப் பயணக்குழுவில் இடம்பெற்றிருந்த திருவள்ளூர் மாவட் டத்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவர் சூர்யா, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர் ஐயப்பன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரகுவன்ஸ், திருச்சிராப்பள்ளி செந்தண்ணீர்புரம் மாநகராட்சிப் பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்ற கீர்த்தனா ஆகியோரையும் சு.வெங்கடேசன் கௌரவித்தார்.பயணக்குழுவினரை வாலிபர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின் தலைமையிலான குழுவினர் கௌரவித்தனர்.

ஜூன் 12 முற்றுகைப் போர்

மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் பேசுகையில், அரசுப் பள்ளிகளிலிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட தனியாரை எடுக்கவிட அனுமதிக்க மாட்டோம். அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது தான் இந்திய மாணவர் சங்கத்தின் லட்சியம். மத்திய அரசு 10 சதவீதமும்,மாநில அரசு 30 சதவீதமும் கல்விக்கென பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வியில் கேரளத்தைப் போல் தமிழகத்தையும் மாற்ற வேண்டும். அரசுப்பள்ளிகள் பாதுகாப்பு, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஜூன் 12-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றார்.