அரியலூரில் நாளை அம்மா திட்ட முகாம்
அரியலூர், ஆக.28 - அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஏழாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் 30.08.2019 அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது. அரியலூர் வட்டத்தில் சன்னாவூர் (வ), விளாங்குடியிலும், உடையார்பாளையம் வட்டத்தில் தத்தனூர்(கி), கோடாலிகருப்பூரிலும், செந்துறை வட்டத்தில் வஞ்சினாபுரத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் திருகளப்பூரிலும் நடைபெறுகிறது. இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு: தொழிலாளர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
குளித்தலை, ஆக.28 - கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முக்கிய வேலைவாய்ப்பக கிராம மக்களுக்கு இருந்து வருகிறது.
அவ்வாறு வழங்கப்படும் வேலைத்திட்டத்தில் கடவூர் துணை வளர்ச்சி அலுவலர், கடவூர் தெற்கு ஓவர்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தரகம்பட்டி பகுதியிலுள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க கடவூர் ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க கரூர் மாவட்டத் தலைவர் கே.கண்ணதாசன், மாவட்டச் செயலாளர் இரா.முத்துசெல்வன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் சாதனங்களை கவனமாக கையாள மின்வாரியம் அறிவுறுத்தல்
மன்னார்குடி, ஆக.28 -பருவமழை துவங்கியுள்ளதால் வீடுகளில் மின் சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும் என மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மன்னார்குடி கட்டுமான உபகோட்டம் உதவி பொறியாளர் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பொதுமக்கள் மின் மாற்றியிலோ, மின் கம்பங்களிலோ ஏறி மின் பழுதினை சரிசெய்யக் கூடாது. மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டும்போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திதுக்கு தகவல் தெரிவித்து, அந்த மின்பாதையில் மின் தடை செய்த பின் வெட்ட வேண்டும். மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. வீட்டிலுள்ள மின்சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். இடி மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மின் கம்பிகள் அருந்து கிடந்தால் மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். கட்டிடங்களுக்கும் மின்பாதைக்கும் இடையில் போதிய இடைவெளி இருக்குமாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும். குழந்தைகளை மின் கம்பிகளுக்கு அருகில் விளையாட விடக்கூடாது. கிரேன் மற்றும் டிப்பர் லாரிகளை மின் பாதைக்கு அருகிலோ கீழோ பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.