1974 - தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தற்கொலை உலகில் முதன்முறையாக நிகழ்ந்தது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தொகுப்பாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த க்றிஸ்ட்டைன் சபக் என்ற 29 வயதுப் பெண், காலைச் செய்தி அறிக்கையை வாசிக்கும்போதே, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினரையும் பிரிந்து, திருமணமும் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்துவந்த சபக், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அன்று காலையிலேயே தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்த சபக், காலைச் செய்தியறிக்கையை தானே வாசிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு முன் அவர் அதைச் செய்ததில்லை என்பதால் ஊழியர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டாலும், அவர் பிடிவாதத்தால் ஏற்றனர். செய்தி அறிக்கையின்போது உரையாட வந்திருந்தவர் முன்னிலையிலேயே, ‘எங்கள் தொலைக்காட்சியின் பாரம்பரியத்திற்கேற்ப, ரத்தமும், துணிச்சலுமாக முதல் தற்கொலையைப் பார்க்கவிருக்கிறீர்கள்’ என்று அறிவித்துவிட்டு, கைப்பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்து, நேரடியாகத் தலையில் வைத்துச் சுட்டுக்கொண்டார். அக்காலத்தில், எல்லா ஒளிபரப்புகளையும் பதிவு செய்யும் வழக்கமில்லை. ஆனால், பதிவு செய்யுமாறு முன்னரே சபக் வலியுறுத்தியதால் இது பதிவு செய்யப்பட்டாலும், தொலைக்காட்சி நிலையம் அதனை இன்றுவரை வெளியிடவேயில்லை. நேரடி ஒளிபரப்பை ஃபேஸ்புக் 2016இல் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, தங்கள் தற்கொலையை நேரடியாக ஒளிபரப்புவது பரவலாக உலகம் முழுவதும் நடைபெறுகிறது. பாரிசைச் சேர்ந்த ஓஷன் எபெம் என்ற 18 வயதுப் பெண், 2016 மே 10இல், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதே, சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பான முதல் தற்கொலையாகும். சமூக மனநிலையைவிட்டு விலகக் காரணமாக இருப்பதால், பொதுவாகவே, தற்கொலைகள் அதிகரிப்பதாக சமூக ஊடகங்களின்மீது குற்றம் சாட்டப்படுகிறது. இணையத்தில் கொடுக்கப்பட்ட தொல்லைகளால் அமெரிக்காவில் ஃபோபி பிரின்ஸ் என்ற 15 வயதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, தற்போது ‘இணைய வன்கொடுமை’ என்றொரு தனிப்பிரிவும், அவற்றுக்கெதிரான சட்டங்களும் உருவாகியுள்ளன. பதிவுகளில் காணப்படும் குறிப்பிட்ட சொற்களைக்கொண்டு, தற்கொலை எண்ணம்கொண்டோருக்கு உரிய ஆலோசகர்கள் மூலம் அறிவுரை வழங்கி, இதுவரை சுமார் 3,500 தற்கொலைகளைத் தடுத்திருப்பதாகவும் ஃபேஸ்புக் கூறுகிறது.