ஜோபைடனும் நானும் தெளிவாக இருக்கிறோம் என்று ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலாஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை உலகமே உற்று நோக்கி வருகிறது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்வாளர் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அமெரிக்க அதிபராவதற்கு இன்னும் 6 தேர்வாளர்களின் வாக்குகள் மட்டுமே ஜோ பைடனுக்கு தேவையான சமயத்தில், டிரம்ப், 214 தேர்வாளர்களின் வாக்குகளை வைத்துக் கொண்டு, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளர் அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும். இந்நிலையில்
வாக்கு எண்ணிக்கையை தனது மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து , துணை அதிபர் வேட்பாளரும், தமிழ் வம்சாவளி பெண்ணுமான கமலா ஹாரிஸ், அவருடைய ட்விட்டர் பதிவில், ஜோ பிடனும் நானும் தெளிவாக உள்ளோம். ஒவ்வொரு வாக்கும் நிச்சயம் எண்ணப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், அதிகாரம் மக்களிடம் இருந்து வர வேண்டும். அதை நாம் வற்புறுத்தி எடுத்து கொள்ள முடியாது. அவர்கள் தான் அமெரிக்காவின் அதிபர் யார்? என்பதை முடிவு செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்